

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய அமைச்சராக பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் விளங்குகிறார்.
2008 இல் நடைபெற்ற தேர்தலில் பேராக் துரோனோ சட்டமன்றத் தொகுதியில் ஜசெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன் பின்னர் பேராக் மாநில சட்டமன்ற சபாநாயகராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற வரலாற்றை ஏற்படுத்தினார்.
ஒரு ஆண்டு கழித்து மூன்று நம்பிக்கை துரோகிகள் அணி மாறியதால் பேராக்கில் பக்கத்தான் ராக்யாட் அரசு கவிழ்ந்தது.
சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து இருந்த இவரை அகற்ற பெரும் போராட்டம் நடந்தது.
பின்னர் அரசியல் நெருக்கடி முற்றியதால் , சட்டமன்றத்தினுள் நுழைய முடியாத நிலையில், சட்டமன்ற வளாக வாகன நிறுத்துமிடத்தில் இருந்த ஒரு மரத்தடியின்கீழ் சட்டமன்றத்தைக் கூட்டிய வரலாறு சிவக்குமாருக்கு உண்டு.இது நாடே அறியும்.
2013,2018,2022 இல் நடைபெற்ற தேர்தலில் பத்து காஜா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார்.
கடந்த காலங்களில் இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்ட மித்ரா நிதி மோசடி மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியம் குறைக்கப்பட்டது தொடர்பில் நாடாளுமன்றத்தில் துணிந்து குரல் எழுப்பினார்.
இப்போது மனித வள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள இவர் சமூக அக்கறையும் ஜனநாயகப் பண்பும் நிறைந்தவர்.
மலேசிய மத்திய அரசில் மனித வள அமைச்சர் பொறுப்பு, சிவக்குமாருக்கு பிறந்த நாள் பரிசாக அமைந்துள்ளது.
1970 டிசம்பர் 5-ஆம் நாள் எம்.வரதராஜு-எஸ்.கருணாகரி இணையருக்கு இவர் மகனாகப் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

