
புதுடில்லி, ஜன 3- செஸ் வீரர் குகேஷ், ஹாக்கி வீரர் ஹர்மன்ப்ரீத் சிங், பாரா அத்லெட் ப்ரவீன் குமார், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாகர் ஆகிய நால்வருக்கும் ‘கேல் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஒன்றிய அரசு கேல் ரத்னா விருது வழங்கி கவுரவிக்கும். அதன்படி நடப்பு ஆண்டிற்கான கேல் ரத்னா விருது பட்டியலை விளையாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
4 பேர் அடங்கிய அந்த பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு கேல் ரத்னா விருது கிடைத்துள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 வெண்கலம் வென்ற துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தடகள வீரர் பிரவீன்குமார், இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங்கும் கேல் ரத்னா விருது பெறும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இது தவிர 17 பாரா தடகள வீரர்கள் உட்பட 32 வீரர்கள் அர்ஜுனா விருது பெறுகின்றனர்.
தமிழ்நாட்டை சேர்ந்த 3 பாரா பேட்மிண்டன் வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
துளசிமதி முருகேசன், நித்யஸ்ரீ, சுமதி சிவனுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் 17ஆம் தேதி நடைபெறும் விழாவில் வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்குகிறார்.

