
ஈப்போ, ஜன. 7-
இங்குள்ள ஈப்போ நாட்டிய கலாஞ்சலி நடனப்பள்ளியில் பரதம் பயிற்சியை மேற்கொண்ட ஏழு மாணவிகள் தங்கள் சலங்கை பூஜையை சிறப்பாக அரங்கேற்றம் செய்தனர்
இவர்களின் குருவான ஸ்ரீமதி புவனேஸ்வரி பன்னீர் செல்வம் கடந்த நான்கு வருடங்களாக பரத பயிற்சி அளித்து தயார் செய்துள்ளது பாராட்டப்பட வேண்டிய விசயமாகும் என்று பாரட்டினார் மேனாள் கவுன்சிலரும், மேனாள் கோப்பெங் ம இ கா தொகுதி தலைவருமாகிய மூ. கிருஷ்ணன் இந்நிகழ்வில் தலைமையேற்ற போது கூறினார்.
இந்த சலங்கை பூஜை அரங்கேற்றம் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற ஆதரவும், உதவிகள் வழங்கிய இந்த மாணவிகளின் பெற்றோர்களுக்கு இவ்வேளையில் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
தங்கள் பிள்ளைகள் இந்திய பாரம்பரிய கலை பண்பாட்டு நிகழ்வில் பங்கு பெற முழுமையான அனுமதி மற்றும் ஆதரவு வழங்கி வரும் பெற்றோர்களின் உயரிய பண்பிற்கு தம் பாராட்டை அவர் தெரிவித்துக்கொண்டார்.
45 ஆவது சலங்கை பூஜை ஸ்ரீமதி கி.புவனேஸ்வரி பன்னீர் செல்வம் தலைமையில் சிறப்பாக நடந்தேறியது.
பெண்கள் ஏதேனும் கலையை கற்க வேண்டுமென்றால் முதலில் தெய்வீக கலையான பரதக்கலையை கற்பது சிறந்த பண்பாகும்.
தற்போது இக்கலையை தமிழர்களை தவிர்த்து சீனர்களும் மலாய்கார ர்களும் கற்க முனைப்பு காட்டி வருகின்றனர்.
நம்முடைய இக்கலையை நாம் பேணிகாப்பது மிகவும் அவசியமாகும் என்று அவர் தம் கருத்தை பதிவு செய்தார்.
இம்முறை நடைபெற்ற சலங்கை பூஜையில் செல்வி அபிநயா பாலமுருகன், செல்வி அக்ஷரா பாலமுருகன், செல்வி குருபிரியா உதயசூரியன், செல்வி ஜெயஷாலினி சுந்தராஜு, செல்வி ஜெயமாலினி சுந்தராஜு, செல்வி கவித்திரா முருகன் மற்றும் செல்வி ஸ்ரீஷா செல்வசேகரன் ஆகியோர
பங்கேற்று சிறந்த படைப்பை வெளிப்படுத்தினர் என்று அவர் தம் பாரட்டை தெரிவித்துக் கொண்டார்.

பரதக்கலை நம் தமிழ் பெண்களின் வாழ்கையை மாற்றியமைக்ககூடியதாகும். குறிப்பாக, இத்துறையில் நல்ல எதிர்காலம் உண்டு. அத்துடன் அவர்களை நல்ல ஒரு பண்பாளராக உருமாற்றம் செய்கிறது.
எங்கு எப்படிப்பட்ட உடைகள் அணிந்து செல்ல வேண்டும். முறையான உடைகள் மற்றும் மற்றவர்களுடன் மரியாதையுடன் பேசுவது போன்ற பல பண்புநலன்களை அவர்கள் பரத வகுப்பில் கற்று வருவதோடு, வீட்டில் மம்மி டாடி என்று கூப்பிடுவதை நிறுத்திவிட்டு அம்மா அப்பா என்று கூப்பிடலாம் என்று ஈப்போ நாட்டிய கலாஞ்சலி நடனப்பள்ளி குருவான ஸ்ரீமதி கி.புவனேஸ்வரி பன்னீர் செல்வம் கூறினார்.
இம்மாணவிகள் சுமார் 40 நாட்களில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு சிறந்த படைப்பினை வெளியிட்டனர். இவர்களில் மூவர் 7, 8 மற்றும் 9 வயதைக்கொண்ட சிறிய மாணவிகளாவர். இருப்பினும், அவர்கள் பெரிய பிள்ளைகள் போல் சிறந்த படைப்பாற்றலை வெளிப்படுத்தினர் என்று அவர் பாராட்டினார்.
இந்த பரதக்கலை வாயிலாக இம்மாணவிகள் யோகா,பரதம் மற்றும் இதர உடற்பயிற்சி கூறுகளை கையாளுகின்றனர். அதனால் அவர்களின் உடலில் சீரான ரத்த ஓட்டம் செயல்படுகிறது. இதனால் இங்கு பரதம் பயின்ற மாணவிகள் மருத்துவர்களாகவும், வழக்கறிஞராகவும், பொறியிலாராகவும் கல்வியில் வெற்றிக்கண்டுள்ளதை அவர் கோடிக்காட்டினார்.
இந்த பரதக்கலை வாயிலாக பழமையை வெளிகொணர முடிகிறது. அத்துடன், வரலாற்று விசயங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடிகிறது. ஆகையால், பரதக்கலை நம் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாகும் என்று அவர் ஆணித்தரமாக கூறினார்.
இந்நிகழ்வின் நிறைவுவிழாவில் சலங்கை பூஜையை அரங்கேற்றம் செய்த ஏழு மாணவிகளும் சிறப்பிக்கப்பட்டு, பரிசுகள் வழங்கினார் மூ.கிருஷ்ணன் தம்பதியினர். மாணவர்களுக்கு நற்சான்றிதழும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

