
பத்துகாஜா,ஜன 7- கால்பந்து துறையில் இளைஞர்களின் கவனம் வெகுவாக திரும்ப வேண்டும்.கடந்தக்காலங்களை போல் அத்துறையில் இளைஞர்களின் ஈடுப்பாடும் முனைப்பும் இருத்தல் வேண்டும் எனவும் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் வலியுறுத்தினார்.
இளைஞர்களிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் மேலோங்க வைப்பதோடு பல்லின மக்களிடையே விளையாட்டின் வாயிலாக நெருக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் பேணவும் கால்பந்து துறை வழிசெய்வதாக அவர் மேலும் கூறினார்.
பூசிங் கிராம மேம்பாட்டு நிர்வாகத்தின் ஏற்பாட்டில் பத்துகாஜா நாடாளுமன்ற நிலையில் நடைபெற்ற பெனால்டி கால்பந்து போட்டியை தொடக்கி வைத்து பேசுகையில் சிவகுமார் இதனை குறிப்பிட்டார்.
சுமார் 64 குழுக்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் அனைத்து குழுக்களும் விளையாட்டு சிந்தனை மேன்மையோடு தங்களின் ஆட்டத்திறனை வெளிப்படுத்தினர்.அவர்களின் தனித்துவ ஆட்டத்திறன் வியப்பாக இருந்ததோடு அவர்களின் நம்பிக்கையான எதிர்காலம் இத்துறையில் இருப்பதை உணர முடிவதாகவும் சிவகுமார் கூறினார்.
மேலும்,உடல் ஆரோக்கியத்திற்கு வித்திடும் கால்பந்து விளையாட்டு ஒற்றுமை,ஒருமைப்பாட்டோடு நாட்டின் விளையாட்டுத்துறைக்கும் பெரும் பங்களிப்பு செய்யும் நிலையில் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்படும் கால்பந்து மட்டுமின்றி ஒவ்வொரு விளையாட்டுப் போட்டிக்கும் தனது பங்களிப்பும் ஆதரவும் ஆக்கப்பூர்வமாய் தொடரும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு வெ.3000, இரண்டாம் நிலைக்கு வெ.1500, 3ஆம் நிலைக்கு வெ.500 மற்றும் நான்காம் நிலை வெற்றியாளருக்கு வெ.300 வழங்கப்படுவதோடு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

