

நாட்டில் பல பிரமுகர்களையும் அரசியல்வாதிகளையும் விளையாட்டாளர் களையும் உருவாக்கி சாதனை படைத்த பெருமை செராஸ் தமிழ்ப் பள்ளிகளுக்கு இருக்கிறது.
சுமார் 45 ஆண்டுகளாக பழைய கட்டடத்தில் இயங்கி வந்த செராஸ் தமிழ்ப் பள்ளிகளுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய விடிவுகாலம் பிறந்தது.
அரசாங்கம் வழங்கிய 15 லட்சமும் நல்லுள்ளம் படைத்தவர்கள் வழங்கிய 7 லட்சமும் ஆக மொத்தம் 22 லட்சம் வெள்ளியில் செராஸ் தமிழ்ப்பள்ளி நான்கு மாடி கட்டிடத்தில் எழுப்பப்பட்டது.
12 வகுப்பறைகளுடன் மாணவர்கள் சகல வசதிகளுடன் படிக்க கூடிய ஒரு தமிழ்ப் பள்ளியாக இன்று செராஸ் தமிழ்ப்பள்ளி விளங்குகிறது.
அந்த வகையில் இன்று செராஸ் தமிழ்ப் பள்ளியின் புதிய இணைக் கட்டடம் முறையாக திறப்பு விழா கண்டது.

கூட்டரசு பிரதேச மாநிலத்தின் கல்வி இயக்குனர் புவான் ஹாஜா நோர்யாத்தி அப்துல் வஹாப் சார்பில் சிறப்பு வருகை புரிந்த துணை இயக்குநர் துவான் ஹாஜி மஸ்னியாமின் முஸ்தாபா கட்டடத்தை அதிகாரப் பூர்வமாக திறந்து வைத்தார்.
செராஸ் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் இரா தேவி, பள்ளி வாரியக்குழு துணை தலைவர் டாக்டர் மோகனா தாஸ் ஆகியோர் மானியம் மற்றும் நன்கொடை வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
செராஸ் வட்டார அரசியல் பிரமுகர் வெற்றி வேலன், டேவிட், தமிழ் ஆர்வலர் பொன். ரெங்கன், பிரகாஷ் ராவ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

