
பேராக் மாநில மஇகா மகளிர் மற்றும் புத்திரி பிரிவுகள், பீடோர் சித்தி விநாயகர் ஆலய நிர்வாகத்துடன் இணைந்து நடத்திய மாநில அளவிலான தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா, பீடோர் சித்தி விநாயகர் ஆலய மண்டபத்தில், மிக நேர்த்தியாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.
இவ் விழாவில் மஇகா தேசிய உதவித் தலைவரும்; மஇகா பேராக் மாநிலத் தொடர்பு குழுத் தலைவருமான தான் ஸ்ரீ எம். இராமசாமி, மற்றும் அவர்தம் துணைவியார் புவான் ஸ்ரீ இந்திரா காந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்ததோடு, இந்நிகழ்வினை குத்துவிளக்கேற்றி சிறப்புரையாற்றி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து இவ்விழாவுக்கு சிறப்பு சேர்த்தனர்.
அனைத்து தொகுதி தலைவர்களும், மகளிர் பிரிவு மற்றும் புத்திரி பிரிவு தலைவிகளும் உடன் கலந்து விழாவினை மேலும் மெருகூட்டினர்.

ஏறக்குறைய 800 பேர் கலந்துகொண்ட இவ்விழாவில் கோலப் போட்டி, பொங்கல் போட்டி, தேங்காய் திருவுதல், தோரணம் பின்னுதல் மற்றும் பாரம்பரிய ஓவியங்களுக்கு வர்ணம் தீட்டுதல் போன்ற போட்டிகள் தமிழரின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உணர்த்தும் போட்டிகளாக அமைந்திருந்தன.
இவ்வகை போட்டிகளானது நூற்றுக்கணக்கான உள்ளூர் இந்திய மக்களைக் கவர்ந்தீர்த்ததுடன், கலை கலாச்சாரத்தைக் கொண்டாடும் மேடையாகவும் அமைந்திருந்தது.

மாணவர்களின் பாரம்பரிய நடனங்களையும் கொண்டிருந்த இப் பொங்கல் விழாவானது, தமிழர் பாரம்பரியம் மற்றும் கலை கலாச்சார பெருமைகளை உயர்த்திக்காட்டி, பங்கேற்றவர்களின் மனதில் மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. ஆக இது ஒரு ஒட்டுமொத்த வெற்றி விழாவாக அமைந்திருந்தது.

