
வாஷிங்டன்: ஜன 22-
பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் நாளில் வெளியிட்ட அறிவிப்பால், அமெரிக்காவில் வாழும் 10 லட்சம் இந்தியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் 47ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபராக ஜே.டி.வான்ஸ் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டனர்.
அதிபராக பதவியேற்ற உடன் முதல் நாளிலேயே பல அதிரடியான அறிவிப்புகளை அதிபர் டிரம்ப் வெளியிட்டார்.
தனது ஓவல் அலுவலகத்தில் 26 முக்கிய நிர்வாக உத்தரவுகளில் அவர் கையெழுத்திட்டார்.
இதில், பல உத்தரவுகள் முந்தைய அமெரிக்க அரசுகள் கடைபிடித்த கொள்கைகளில் இருந்து முற்றிலும் விலகும் வகையில் உள்ளன.
அந்த வகையில், பிறப்புரிமை அடிப்படையில் அமெரிக்க குடியுரிமை வழங்கும் மிகப்பழமையான திட்டத்தை டிரம்ப் ரத்து செய்திருப்பது அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில், பெற்றோரின் குடியுரிமை அல்லது குடியேற்ற நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும், அந்நாட்டு மண்ணில் பிறந்த குழந்தைக்கு தாமாக குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கான சட்டம் 1868ம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது.
தற்போது இதை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் டிரம்ப்.

