

ஈப்போ, ஜன. 8: பத்தாவது நாளாக தைப்பூசத்தை முன்னிட்டு சமூக சேவகர் கோவிந்தசாமி மற்றும் அவரது நண்பர்கள் ஒன்றிணைந்து ஈப்போ கல்லுமலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்வு எங்களின் ஏழாவது ஆண்டாக நிறைவுபெறுவதை எண்ணி மகிழ்ச்சியடைவதாக ஏற்பாட்டுக் குழு தலைவர் கோவிந்தசாமி கூறினார்.
ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் தலைவர் இரா. சீத்தா இராமன் மற்றும் அவரது நிர்வாகத்தினர் வழங்கிய முழுமையான ஆதரவால் இம்முறை சுமார் 1200 பக்தர்களுக்கு சைவ பிரியாணி அன்னதானமாக வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த ஈப்போ கல்லுமலை ஆலயத்தை தவிர்த்து இவ்வட்டாரத்திலுள்ள பல ஆலயங்களுக்கு அன்னதானம் மற்றும் இதர உதவிகளை தங்கள் தரப்பினர் செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இன்று கல்லுமலை ஆலயத்தில் நடைபெற்ற அன்னதானம் வழங்கும் நிகழ்வில் வீட்டிற்கு உணவை எடுத்துச் செல்லவும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார். வருவோர்களுக்கு பசிக்கு உணவு அளிப்போம் என்ற கோட்பாட்டின் கீழ் சிறப்பாக அன்னதானம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கோவிந்தசாமி கூறினார்.

