
கோலாலம்பூர் மார்ச் 16-
தலைநகரில் புகழ்பெற்ற பிரிக்பீல்ட்ஸ் சிவன் ஆலயத்தின் கதவு மூடப்பட்டதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிக்பீல்ட்ஸ் சிவன் ஆலய தீர்க்க தரிசிகள் சன்னிதான நிர்வாகம் ஆலயத்தை முறையாக வழி நடத்தி வந்தது.
ஆனால் இந்து மகா சபா அண்மையில் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்ற ஆணையை பெற்றது.
இந்த ஆலயத்தை வழிநடத்தும் அதிகாரம் எங்களுக்கு இருக்கிறது என்று கூறி கடந்த வெள்ளிக்கிழமை இந்து மகா சபா ஆலயத்தை பூட்டியதாக ஆலயத் தலைவர் ராஜசிங்கம் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் வந்த இந்து மகா சபாவினர் சாமி கும்பிட வந்தவர்களை வெளியேற்றி ஆலயத்தை பூட்டியது எங்களுக்கு கடுமையான அதிர்ச்சியை தந்தது.
ஆலயத்திற்கு எதிராக நீதிமன்ற உத்தரவை இந்து மகா சபா பெற்றது தொடர்பில் எங்களுக்கு எதையும் தெரிய படுத்தவில்லை.
பொய்யான தகவல்களை சமர்ப்பித்து இந்து மகா சபா இந்த நீதிமன்ற உத்தரவை பெற்றுள்ளது என்றார்.
மேலும் இந்து மகா சபா இப்போது சட்டப்பூர்வ அமைப்பு இல்லை.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி இந்து மகா சபாவின் பதிவு ரத்தானது.
ஒரு ரத்தான அமைப்பு இன்று ஆலயத்தை அபகரித்து சொந்தம் கொண்டாடுவது சட்டப்படி தவறு என்று அவர் சொன்னார்.
மேலும் இந்து மகா சபா நீதிமன்ற ஆணையை யாசோதா என்பவரிடம் சமர்பித்து விட்டதாகவும் அவரிடம் கையெழுத்து வாங்கி விட்டதாக கூறுகிறது.
அந்த நேரத்தில் பரமேஸ்வரி இந்தியாவில் இருந்தார். அப்படி இருக்கும் போது அவரால் எப்படி கையெழுத்து போட்டிருப்பார் என்று அவர் கேள்வியை எழுப்பினார்.
தங்களுக்கு சாதகமான நீதிமன்ற ஆணையை பெற்ற இந்து மகா சபா கடந்த ஒரு வாரமாக ஆலயத்தை பூட்டி வைத்துள்ளது.
இதனால் பக்தர்கள் யாரும் ஆலயத்திற்கு சென்று சாமி கும்பிட முடியவில்லை என்றார்.
இதனிடையே இந்து மகா சபா நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை .
நான் எந்தவொரு ஆவணத்திலும் கையெழுத்து போடவில்லை.
அப்படி இருக்கையில் நான் எப்படி கையெழுத்து போட்டிருப்பேன் என்று பரமேஸ்வரி உட்பட பலரும் கூறினர்.
போலி கையெழுத்து விவகாரம் தொடர்பில் போலீஸ் புகார்கள் செய்திருப்பதாக பரமேஸ்வரி தெரிவித்தார்.
இன்று காலையில் ஆலயத்தில் முன் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரிக்பீல்ட்ஸ் சிவன் ஆலய தீர்க்க தரிசிகள் சன்னிதான நிர்வாகத்தினர் பெரும் அளவில் திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

