
பத்துகாஜா,ஏப்09: கடந்த 4ஆம் தேதி பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் உதவிநிதி வழங்கினார்.
துரோனோ கம்போங் நல்லாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுமார் 19 குடும்பத்தினர் பாதிக்கப்பட்ட நிலையில் குடும்பத்திற்கு வெ.1000 என்னும் நிலையில் மொத்தம் வெ.19 ஆயிரத்தை உதவிநிதியாக அவர் வழங்கினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு இவ்வுதவி தொகை பொருளாதார ரீதியில் அவர்களின் தேவைகளுக்கு உதவியாக இருக்கும் என்று தாம் நம்புவதாக கூறிய சிவகுமார் தொடர்ந்து அம்மக்களின் தேவைகள் கேட்டறியப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும்,வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணம்,இனி வருங்காலங்களில் வெள்ளம் ஏற்படாமல் இருப்பதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆராயும்படி சம்மதப்பட்ட அரசு இலாகாவை கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளையில்,உதவித்தொகையை பெற்று கொண்டவர்கள் மாண்புமிகு சிவகுமார் அவர்களுக்கு நன்றி கூறியதோடு உரிய நேரத்தில் எங்களின் எதிர்பார்ப்பு அறிந்து உதவிட அவர் எப்பவுமே முதன்மையானவர் எனவும் பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

