
ஈப்போ ஏப்ரல் 14-
பேராக் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற தொகுதி கெஅடிலான் தேர்தலில் பல முக்கிய தலைவர்கள் அதிர்ச்சி தரும் வகையில் தோல்வி அடைந்தனர்.
சுங்கை சிப்புட் தொகுதி தேர்தலில் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கேசவன் 32 வாக்குகள் வித்தியாசத்தில் பேராக் மாநில கெஅடிலான் தகவல் பிரிவு துணை தலைவர் நோவிந்தன் கிருஷ்ணனிடம் தோல்வி அடைந்தார்.
இவருக்கு 357 வாக்குகள் கிடைத்தன. நோவிந்தனுக்கு 389 வாக்குகள் கிடைத்தன.
ஊத்தாங் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் வசந்தி 524 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட மனோகரன் 1,162 வாக்குகள் பெற்று 638 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேராக் உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினர் அரபாட் 1,233 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சம்சூல் 1,458 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதனிடையே கெடா மாநிலத்தில் சுங்கை பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் பிர்டாவூஸ் அதிர்ச்சி தரும் வகையில் ஜெராய் கெஅடிலான் தொகுதி தேர்தலில் பூபாலன் என்பவரிடம் தோல்வி அடைந்தார்.
நாடாளுமன்ற சபாநாயகர் டத்தோஸ்ரீ ஜோகாரியின் புதல்வர் முகமட் பிர்டாவூஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இளைஞர் விளையாட்டு துறை துணை அமைச்சர் மற்றும் ஹாங் துவா நாடாளுமன்ற உறுப்பினர் அடாம் அடில், பெட்டாலிங ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங், அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ரோட்ஸியா, ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய்க் கியாட், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் முகமட் பாமி , முன்னாள் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா சானி ஆகியோரும் தோல்வி அடைந்தனர்.

