


ஈப்போ, மே.20: மாணவர் பருவம் மற்றும் இதர வாய்ப்புகள் வாழ்க்கையில் ஒரு முறைதான் வரும். அந்த வாய்ப்பினை முறையாக நன்கு பயன்படுத்திக்கொள்ள மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பேராக் ஸ்ரீமுருகன் நிலையத்தாரின் ஆசிரியர் தின விழாவில் முன்னாள் ஆசிரியர், அனைத்துலக காற்பந்து நடுவரும் மற்றும் செய்தியாளருமாகிய ஆர்.கிருஷ்ணன் கலந்துக் கொண்டபோது கூறினார்.
வாழ்க்கையில் மாணவர் பருவம் என்பது ஒரு முறைதான் கிடைக்கப்பெறுவார்கள்.
ஆகையால், மாணவர்கள் இக்காலகட்டத்தில் இந்த அரிய வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொண்டு தங்கள் கல்வியில் தீவிர கவனம் செலுத்தி வெற்றி பெறுவது அவசியம் என்று அவர் கருத்துரைத்தார்.
மாணவர்கள் தங்களின் மாணவர் பருவத்தில் பல வகையான சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிவரும்.
இருப்பினும், அவையனைத்தும் ஒரு புறம் ஓரங்கட்டிவிட்டு தங்களின் மேம்பாட்டிற்கு கல்வியில் அதிக கவனம் செலுத்தும் நற்பண்புகளோடு செயல்படுவது மிகவும் அவசியம் என்று அவர் சொன்னார்.
இந்த உலகில் இன்று பிறந்த குழந்தை முதல் 100 வயது முதியோர் வரை பல சவால் களையும், சிரமங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.
இதுவும் கடந்து போகும் என்ற நோக்கத்தில் மாணவர்கள் தங்கள் கல்வியில் முழு கவனத்தை செலுத்தி தேர்வில் வெற்றிக்காண முற்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
மாணவர்கள் முதலில் அவரவர் உணர்வுகளை மதிப்பளிக்க வேண்டும். அத்துடன், உங்களுடன் குடிகொண்டுள்ள நல்ல உணர்வுகளை வெளிக்கொணற வேண்டும்.
குறிப்பாக, ஒரு சில சமயம் தங்கள் தந்தை தாய் அல்லது தாத்தா பாட்டி பாணியில் உரையாற்றுவார்கள். இவை யாவும் அவர்களிடையே கொண்டுள்ள ஆழமான உணர்வாகும் என்று முன்னாள் ஆசிரியர் மு.இந்திரன் சிறப்பிக்கப்பட்டபோது கூறினார்.
மாணவர்கள் தங்களிடம் உள்ள நற்பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, நல்ல நண்பர்களுடன் பழுகுதல், நற்சிந்தையுடன் எதையும் துணிச்சலுடன் செயல்படுத்துதல் மற்றும் மற்றவர்களை மதிப்பளிக்கும் பண்பினை வளர்த்துக்கொண்டால், சிறந்த மாணவர்களாக அவர்கள் திகழ முடியும் என்று அவர் நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வின் நிறைவு விழாவில், இரு முன்னாள் ஆசிரியர்களான ஆர்.கிருஷ்ணன் மற்றும் மு.இந்திரன் மாணவர்கள் முன்னிலையில் சிறப்பித்தார் பேராக் ஸ்ரீ முருகன் நிலைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சேகர் நாராயணன்.

