

இவ்வாண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை சட்டவிரோத தொழிலாளர்கள் தங்களை சட்ட ரீதியான தொழிலாளர்களாக மாற்றிக் கொள்ள உள்துறை அமைச்சு வழங்கியுள்ள வாய்ப்பு மிகவும் வரவேற்கக்கூடியது என்று சிலாங்கூர் -கோலாலம்பூர் இந்திய வர்த்தக சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ ஆர் இராமநாதன் மற்றும் மலேசிய இந்தியர் உலோகப் பொருள் மறுசுழற்சி சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் பி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தெரிவித்தனர்..
இந்த வாய்ப்பை மலேசியாவில் உள்ள இந்திய தொழில் வர்த்தகர்கள் முதலாளிகள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் அந்நியத் தொழிலாளர்களை இந்திய உட்பட 16 நாடுகளில் இருந்து தருவிக்க அரசாங்கம் அனுமதி வழங்கி உள்ளது.
அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த முதலாளிகளின் விண்ணப்பங்கள் மூன்று நாட்களில் பரிசீலிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் நேற்று தெரிவித்தார்.
நாட்டில் அனைத்து துறைகளிலும் அந்நியத் தொழிலாளர்கள் தேவைப் படுகிறார்கள்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான புதிய அரசாங்கம் அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சனைக்கு நல்ல முறையில் தீர்வு கண்டு வருவது மிகவும் பாராட்டுக்குரியது.
மனித வள அமைச்சர் வி சிவகுமார் மற்றும் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் ஆகியோர் கூட்டாக மேற்கொண்டு வரும் அந்நியத் தொழிலாளர்கள் மீதான நடவடிக்கைகள் மிகவும் பாராட்டுக்குரியது என்று அவர்கள் தெரிவித்தனர்.


