பொருளாதார அமைச்சு கலைக்கப்படாது-  சரியான தருணத்தில் புதிய அமைச்சர் நியமனம்- பிரதமர்

கோலாலம்பூர், ஜூன் 17 –  பொருளாதார அமைச்சை  தற்போது கலைக்க வேண்டிய அவசியமில்லை என்பதோடு புதிய அமைச்சரை நியமிப்பது குறித்து உரிய நேரத்தில்  முடிவு செய்யப்படும் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பிரதமர் துறையின் கீழ் பொருளாதார திட்டமிடல் பிரிவாக (இ பி.யு.) முன்னர் இருந்த பொருளாதார அமைச்சு,   பக்காத்தான் ஹராப்பான்  நிர்வாகத்தின் போது முழுமையான அமைச்சாக மாற்றப்பட்டது என்று அவர் கூறினார்.

(அமைச்சின் கட்டமைப்பை) மாற்றுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. (கட்டமைப்பை) தீர்மானிப்பவர்கள் அமைச்சரவையும் நானும் தான். எனவே இதுவரை எதையும் மறுசீரமைக்க வேண்டிய அவசியமில்லை என்று நான் நினைக்கிறேன் என்று  சொன்னார்.

அவர் இன்று கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில்  2025ஆம் ஆண்டு  ஆசிய எரிசக்தி மாநாட்டிற்கு  தலைமை தாங்கிய பின்னர் ஊடகங்களிடம் இதனைத் தெரிவித்தார்.

வரும் ஜூலை  மாதம் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ள 13வது மலேசியா திட்டம் குறித்து கருத்துரைத்த  அன்வார்,  இது முக்கிய செயலகமாகச் செயல்படும் பொருளாதார அமைச்சின் ஒத்துழைப்புடன்   அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு  என்றார்.

பொருளாதார  சூழல் மாறும் தற்போதைய  நிலையில்  பல்வேறு மாற்றங்களும் சரிசெய்தல்களும் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நாட்டின் முக்கிய நபர்களின் கணிப்புகளைப் பாதிக்கும் கட்டண மாற்றங்களும் இதில் அடங்கும் என்றும் அவர் கூறினார்.

அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கொள்கைகளை ஏற்றுக்கொள்வது குறித்து அமைச்சுகளிடமிருந்து கருத்துக்களைக் கேட்க  கடந்த வாரம் ஒரு கூட்டத்தை நடத்தினோம்  என்று அவர் தெரிவித்தார்.

பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ரபிஸி ரம்லி  கடந்த மே 28ஆம் தேதி தனது  ராஜினாமாவை அறிவித்தார். அவரது விடுப்பு  இன்றுடன் முடிவடைகிறது.

இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமதுவின் ராஜினாமாவின் நிலை குறித்து கேட்டதற்கு, இந்த விஷயம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் ஏனெனில் அவர்  முடிவை எடுப்பதற்கு உரிய அவகாசம் வழங்க விரும்புகிறோம் என்றும் அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles