
செ.வே.முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் ஜூன் 29-
தனது உயிர் பிரியும் வரை இந்திய சமுதாயத்தின் மீதும் இந்திய மாணவர்கள் மீதும் அதிக பற்றும் பாசமும் வைத்திருந்தவர் டான்ஸ்ரீ டாக்டர் எம். தம்பிராஜா என்று முருகன் கல்வி நிலையத்தின் இயக்குனர் சுரேந்திரன் கந்தா தெரிவித்தார்.
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் மூலம் தொடர்ந்து 43 ஆண்டுகளாக தன்னலம் கருதாமல் சேவையாற்றினார்.
அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதும் கூட ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் மற்றும் இந்திய மாணவர்களை பற்றியே அதிக அக்கறை கொண்டிருந்தார்.
அவரின் மறைவு ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்திற்கும் இந்திய சமுதாயத்திற்கும் பேரிழப்பு.
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் மூலம் இந்திய சமுதாயத்தின் மத்தியில் கல்விப் புரட்சியை ஏற்படுத்தியவர் டான்ஸ்ரீ டாக்டர் எம் தம்பிராஜா.

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து படிப்படியாக உயர்ந்தவர்.
கல்விக்காக
அவரின் சேவை அளப்பரியது.
அவர் வழிகாட்டிய பாதையில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தொடர்ந்து பயணிக்கும் என்று சுரேந்திரன் தெரிவித்தார்.
கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி டான்ஸ்ரீ டாக்டர் எம் தம்பிராஜா தமது 83 ஆவது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரின் மறைவை முன்னிட்டு இன்று பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா இடைநிலைப் பள்ளியில் நினைவஞ்சலி பிரார்த்தனை நடைபெற்றது.

டான்ஸ்ரீ டாக்டர் தம்பிராஜாவின் புதல்வி சுமித்ரா இதில் கலந்து கொண்டார்.
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் , மாணவர்கள், பெற்றோர்கள் டான்ஸ்ரீ டாக்டர் எம் தம்பிராஜாவுக்கு கண்ணீரோடு அஞ்சல் செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

