


மா.பவளச்செல்வன்
கோலாலம்பூர் ஜூன் 28-
சுமார் 12 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு மலேசிய இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு 7, 500 அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்கியது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் முன்னாள் மனிதவள அமைச்சர் சிவகுமார் ஆகியோர் முடித்திருத்தும் நிலையங்கள் , டெக்ஸ்டைல்ஸ் மற்றும் நகைக் கடைகளுக்கு 7,500 அந்நியத் தொழிலாளர்களை பெற்றுத் தந்தார்கள்.
இந்த 7,500 அந்நியத் தொழிலாளர்களில் முடித்திருத்தும் நிலையங்களுக்கு
3, 313 அந்நியத் தொழிலாளர்களுக்கு பெர்மிட் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் மலேசிய இந்தியர் சிகை அலங்காரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட அந்நியத் தொழிலாளர் பெர்மிட் மட்டுமே கிடைத்திருக்கிறது.
இங்கு முக்கியமான கேள்வி என்னவென்றால்
3,313 அந்நியத் தொழிலாளர்கள் பெர்மிட் எந்தெந்த முடித் திருத்தும் கடைகளுக்கு வழங்கப்பட்டது என்று மலேசிய இந்தியர் சிகை அலங்கார நிலைய உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஆர்.இராஜசேகரன் கேள்வியை எழுப்பினார்.
நாங்கள் 12 ஆண்டுகளாக போராடி இந்த அந்நியத் தொழிலாளர்களை பெற்றோம்.
ஆனால் இது யாருக்கு வழங்கப் பட்டது என்பது பெரும் மர்மமாக உள்ளது.
இந்தியர் முடித்திருத்தும் நிலையங்களில் வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்கள் இல்லாமல் நாங்கள் பரிதவிக்கிறோம்.
ஆனால் 3,313 வேலை பெர்மிட் வழங்கி விட்டதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறுகிறார்கள்.
எங்களுக்கு கிடைக்க வேண்டியதை யார் யாரோ சுருட்டி கொண்டு போய் விட்டார்கள்.
ஈப்போவில் உள்ள ஒரு முடித்திருத்தும் கடைக்கு 52 பெர்மிட் மற்றும் இன்னொரு கடைக்கு 400 பெர்மிட் வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
மலேசிய இந்தியர் சிகை அலங்கார நிலைய உரிமையாளர் சங்கத்திற்கு குறைந்தது ஆயிரம் அந்நியத் தொழிலாளர் பெர்மிட் வழங்கினால் கூட போதுமானது என்று அவர் சொன்னார்.
கோலாலம்பூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் இன்று 24 ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் மனிதவள அமைச்சர் சிவகுமார், ம இகா முன்னாள் தேசிய உதவித் தலைவர் டத்தோ டி மோகன், மைக்கி துணை தலைவர் டத்தோ ஏ.டி. குமரராஜா, மலேசிய இந்தியர் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல், லேபோ அம்பாங் இந்தியர் பாரம்பரிய வர்த்தக சங்கத்தின் தலைவர் வேலாண்டி, சிலாங்கூர் – கோலாலம்பூர் இந்திய வர்த்தக சங்கத்தின் துணைத் தலைவர் பிரபாகரன், மலேசிய இந்தியர் சிகை அலங்காரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சுதந்திரம், டத்தோ டாக்டர் மகேந்திரன் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

