

தமிழர் பண்பாட்டு வாழ்க்கை முறையில் சிறுக சிறுக மறைந்து வரும், மண்பாண்ட மகிமைக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தும் உத்வேகத்தில், மாநிலத்தில் கோலாகலமாக அனுசரிக்கப்பட்ட 17 ஆம் ஆண்டின், ஜோர்ஜ்டவுன் மரபியல் விழாவில்,
பினாங்கு இந்து இயக்கத்தினர் அதன் சிறப்பினை எடுத்துரைக்கும் தீவிர முயற்சியுடன்
களமிறங்கி, ஏகோபித்த வருகையாளர்களின் கவனத்தை
ஈர்ப்பதில் வெற்றி கண்டனர்.
வாழ்க்கை முறையில் ஓர் உன்னதக் கலாசாரமாகத் திகழ்ந்து வந்த மண்பாண்ட உபயோகம், காலப் போக்கில் மறைந்து வரும் அவல நிலைக்கு புத்துயிர் அளிக்கும்
உன்னத நோக்கத்துடன் அவ்வியக்கத்தினர் எடுத்துக் கொண்ட அக்கறையும் ஆர்வமும் தமிழர் சமூகத்தினரிடையே மட்டுமல்லாது பற்பல தரப்பினர் மத்தியிலும், நல்ல வரவேற்புக்கு வித்திட்டது.

தமிழர் பண்பாட்டின் முக்கிய அம்சமாக திகழ்ந்து வந்த மண்பாண்ட உபயோக முறை மீண்டும் மறுமலர்ச்சி பெறுவதற்கு, பினாங்கு இந்து இயக்கத் தலைவர்
டத்தோ பி.முருகையா, தனது செயற் குழுவினருடன் இணைந்து, இந்த கைவினைக் கலையை, செய்முறை விளக்கத்தோடு, இங்கு நடத்திய கண்காட்சி, மண்பாண்ட
மகிமையின் பெருமையை பறைசாற்றி, தமிழர் மத்தியில் இந்த உன்னத கலாச்சாரப் பற்றினை, மீண்டும் தக்க வைப்பதற்கு வகை செய்தார்.
உற்பத்தித் தொழிலை சளைக்காமல் நடத்தி வரும் பாரிட் புந்தார் புகழ்
ரகுராஜ் த/பெ தேவராஜ் (வயது 49) என்பவரின் துணையுடன் அதன் தயாரிப்பு முறையை மட்டுமின்றி, அதன் பெருமையையும் உலகறிய ஆதாரப்பூர்வமாக எடுத்துரைக்கும் உன்னத நோக்கத்தில், முருகையா தனது செயற் குழுவினரை
ஒருங்கிணைத்து, செவ்வனே செயல்பட்ட விதம், ஜோர்ஜ்டவுன் மரபியல் விழாவில் மாநில முதல்வர் சௌ கொன் இயாவ் உள்ளிட்ட ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும்
இதர அரசியல் பிரமுகர்கள் யாவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது.
இங்கு கோலாகலமாக நடந்தேறிய, ஜோர்ஜ்டவுன் மரபியல் பண்பாட்டு விழாவுக்கு மாநில மாநகர் மன்ற மேயர் டத்தோ அ.ராஜேந்திரன் தம்பதியர் வருகையளித்து
மண்பாண்டச் சிறப்பினை பறைசாற்றும் முயற்சிக்கு தங்கள் நல்லாதரவைக் கூறி
வாழ்த்துரைத்தனர். சமையல் உபயோகங்களுக்கு அப்பாற்பட்டு, இசைத் துறைக்கும் “கடம்” என்றப் பெயரில் ஒரு கருவியாக இது பயன்படுவது தனிச் சிறப்பு என்று,
அவ்விருவரும் புகழாரம் சூட்டினர்.
அரியப் பெருமைகளை எடுத்துரைத்து அதன் செய்முறை வழிகாட்டலும்,
ஒன்றிய முயற்சியாக அரங்கேற்றப்பட்ட இந்தக் கண்காட்சியில், மண்பாண்ட
குயவத் தொழிலின் ஆசான் ரகுராஜ், அன்றைய தினம் காட்சிப் பொருள்களாக
அணிவகுத்திருந்த பானைகள், சாடிகள், குவளைகள், குடுவைகள், அகல் விளக்குகள், தட்டுகள் போன்றவை வண்ணம் தீட்டப்பட்ட
வடிவங்களுடன் கண்ணைக் கவரும் வகையில் வருகையாளர்களின்
வரவேற்பைப் பெற்றன.
மண்பாண்ட மகிமையை இக்காலத் தமிழர்கள் மத்தியில் மீண்டும்
தழைக்கச் செய்வதை தலையாய நோக்கமாகக் கொண்டு, பினாங்கு
இந்து இயக்கம் வாயிலாக இத்திட்டத்தில் தாங்கள் ஈடுபாடு காட்டியதற்கு, இவ்வரிய வாய்ப்பு தக்கதொரு பாலமாக உதவியிருப்பது தொடர்பில், தாம் மாநில அரசுக்கு
நன்றி பாராட்டுவதாக முருகையா, தனது மனநிறைவை வெளிப்படுத்தினார்.

