மலாக்கா மண்ணில் தமிழ்மொழிக்கு மகுடம் சூட்டிய செந்தமிழ் விழா – டத்தோ சண்முகம் தொடங்கி வைத்தார்!

மலாக்கா, ஜூலை 14 – மலாக்கா மாநிலத்தில் தமிழ்மொழி வளர்ச்சிக்கு மகுடம் ஊட்டும் வகையில், “செந்தமிழ் விழா 2025” மாநில அளவிலான மாபெரும் தமிழ்மொழிப் போட்டிகள் கடந்த ஜூலை 12, 2025 அன்று, ஶ்ரீ பெங்காலான் இடைநிலைப்பள்ளி மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. தமிழ் மொழியின் செழுமையையும் அதன் அழியாப் பாரம்பரியத்தையும் கொண்டாடும் இவ்விழா, காலை தொடங்கி மாலை வரை பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த மாபெரும் நிகழ்வுக்கு, மலாக்கா மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ சண்முகம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். தனது உணர்வுப்பூர்வமான தொடக்க உரையில், “இளைய தலைமுறையினரிடையே தமிழ் மொழியின் பயன்பாட்டையும், அதன் இலக்கிய வளத்தையும் நாம் வளர்த்தெடுக்க வேண்டும். தாய்மொழியின் வேர்களை வலுப்படுத்துவதன் மூலம், நமது பண்பாடும் பாரம்பரியமும் நிலைத்து நிற்கும்,” என வலியுறுத்தினார். அவரது உரை, அங்கு கூடியிருந்த அனைவரையும் ஊக்கப்படுத்தியது.

இந்தச் செந்தமிழ் விழாவை வெற்றிகரமாக நடத்த ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசகராக, மலாக்கா மாநிலக் கல்வி இலாகாவின் தமிழ்மொழிப் பிரிவு உதவி இயக்குனர் திரு. முருகையா அவர்கள் பெரும் பங்காற்றினார். அவரது வழிகாட்டுதலும், அயராத முயற்சியுமே இந்த விழாவை சிறப்புற நடத்த உதவியது.

மலாக்கா மாநிலக் கல்வி இலாகாவும் மலேசிய இந்திய காங்கிரஸ் மலாக்கா மாநிலமும் மலாக்கா மாநிலத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையும் மலாக்கா மாநிலத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் சங்கமும் ஆகிய முக்கிய அமைப்புகளும் இணைந்து இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தன. இந்த ஒருங்கிணைந்த முயற்சி, தமிழ் மொழி மேம்பாட்டுக்கான கூட்டுப் பொறுப்பை எடுத்துக்காட்டுகிறது.

தமிழ்மொழிப் போட்டிகளின் உச்சகட்டமாக, மாநில அளவிலான ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அவ்வரிசையில் இடைநிலைப்பள்ளி பிரிவில் பாயா ரும்புட் இடைநிலைப்பள்ளி ஒட்டுமொத்த வெற்றியாளர்களாகவும் தமிழ்ப்பள்ளி பிரிவில் மலாக்கா குபு தமிழ்ப்பள்ளி ஒட்டுமொத்த வெற்றியாளர்களாகவும் வாகை சூடின.

இந்த செந்தமிழ் விழா 2025, வெறும் ஒரு பரிசளிப்பு விழாவாக மட்டுமல்லாமல், மலாக்கா மாநிலத்தில் தமிழ் மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றைப் பாதுகாத்து, வளர்த்தெடுப்பதற்கான ஒரு பெரும் உந்துதலாக அமைந்துள்ளது. இது, வருங்காலத் தலைமுறையினருக்குத் தமிழ் மொழியின் பெருமையை எடுத்துச் செல்லும் ஒரு முக்கிய நிகழ்வாக வரலாற்றில் இடம்பெறும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles