மூன்றுநாள் தொழில்துறை கல்வி முகாம் – வெ 30ஆயிரம் வழங்கினார் சிவநேசன்!!

பீடோர்,ஆக01: சுங்கை இடைநிலைப்பள்ளியின் இந்திய மாணவர்களின் எதிர்காலத்தை நம்பிக்கையான இலக்கில் பயணிக்க வைக்க மூன்று நாள் தொழில்துறை கல்வி முகாமினை அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் முன்னெடுத்திருப்பதை வரவேற்ப்பதாக கூறிய சுங்கை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு அ.சிவநேசன் ஒவ்வொரு இடைநிலைப்பள்ளியும் இத்தகைய நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

கல்வியில் பின் தங்கிய மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் எதிர்காலம் நம்பிக்கையாகவும் சிறந்ததாகவும் அமைவதை உறுதி செய்ய தொழில்துறை கல்வி ஒவ்வொரு இளைஞனின் எதிர்காலத்தையும் உயர்த்தி பிடிக்கும் மூலதனமாக அமைந்திருப்பதாக கூறினார்.

சுங்கையில் அமைந்திருக்கும் பெல்டா தங்கும் விடுதியில் இம்மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இம்முகாமிற்கான மொத்த செலவினமான வெ.30 ஆயிரத்தையும் தாம் வழங்குவதாக மாநில சுகாதாரம்,மனிதவளம்,ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் உறுதி அளித்தார்.

மேலும்,கல்வியில் பின் தங்கிய இந்திய மாணவர்களுக்காக மட்டுமில்லாமல் வருங்காலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் தொழில்துறை கல்வி சார்ந்த முகாம்,பட்டறைகள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார்.மேலும்,இம்முகாமில் பேரா மாநில தொழில்துறை,தொழில்நுப்டம் சார்ந்த திறன்மிக்கவர்களால் இம்முகாம் நடத்தப்படும் எனவும் பொரோட்டோன் கார் தொழில்துறை சார்ந்த அதிகாரிகளின் விளக்கமும் கூட இதில் இடம் என்றார்.

அதேவேளையில்,பொலிடெக்னிக் கல்லூரி பிரதிநிதிகளின் விளக்கமும் இம்முகாமில் இடம் பெறும் என்பதையும் சுட்டிக்காண்பித்த சிவநேசன் மிக குறுகிய கால தொழில்துறை கல்விகளால் நம் மாணவர்கள் சிறந்த எதிர்காலத்தை நிறைவான ஊதியத்துடன் அமைத்து கொள்ள முடியும் என்றார்.கல்வியில் சிறந்த தேர்ச்சி இல்லையெனில் எதிர்காலமே இருண்டு விட்டது என்பதெல்லாம் அந்த காலம்.

இன்றைய நிலையில் தொழில் துறை கல்வி சிறந்த எதிர்காலத்தை அமைத்து கொடுக்க தயாராகவே உள்ளது.அரசாங்கமும் தொழில் துறை கல்வியில் மலேசியர்கள் நாட்டம் கொள்ள வேண்டும் என வலியுறுத்துவதோடு அதற்கான வாய்ப்புகளையும் வசதிகளையும் ஏற்படுத்தி கொடுப்பதாகவும் பேரா மாநில தொழில்துறை கல்வி மையத்தின் தலைவருமான சிவநேசன் நினைவுறுத்தினார்.

அதேவேளையில்,பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் சிறந்து விளங்க வேண்டுமென எண்ணினால் தொழில்துறை கல்வி குறித்த விழிப்புணர்வை கொண்டிருக்க வேண்டும்.பேரா மாநிலம் முழுவதும் அது குறித்த விளக்கம் ஆங்காங்கே வழங்கப்பட்டு கொண்டிருக்கும் சூழலில் அதுமாதிரியான நிகழ்ச்சிகளில் கலந்து தெளிவு பெற வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.

இதற்கிடையில்,இடைநிலைப்பள்ளியில் பயிலும் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கல்வி தரம்,மாணவர் தரநிலைப்பாடு ஆகியவை மட்டுமே இயல்பாக நாம் கணக்கில் எடுத்து கொள்வதாக சுட்டிக்காண்பித்த சிவநேசன் இனி வருங்காலங்களில் மலாய்ப்பள்ளி மற்றும் சீனப்பள்ளியிலிருந்து இடைநிலைப்பள்ளிக்குச் செல்லும் இந்திய மாணவர்களின் கல்வி உட்பட தரநிலைப்பாடும் கண்டாராயப்படும் என்றார்.

அதேவேளையில்,சுங்கையில் அமைந்திருக்கும் தொழில்துறை கல்வி மற்றும் பயிற்சி மையத்தில் அவ்வப்போது நடைபெறும் பயிலரங்கத்தில் நம்மவர்கள் கலந்து பயன்பெற வேண்டும் எனவும் தொழில்துறை பயிற்சிகளுக்காக அம்மையத்தை இலவசமாக பள்ளிக்கூடங்களும் பொது இயக்கங்களும் பயன்படுத்தியும் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக மாண்புமிகு சிவநேசன் வழங்கிய மானியத்திற்கும் தொழில்துறை கல்வி சார்ந்த ஆலோசனை மற்றும் வழிகாட்டலும் சுங்கை இடைநிலைப்பள்ளியின் முதல்வர் ஷாஹாடியா,பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஆகியோர் நன்றி தெரிவித்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles