
செ.வே.முத்தமிழ்மன்னன்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 1
தோட்ட தொழிலாளர்களுக்கான வீட்டுரிமைச் சட்டத்தின் கீழ் குறைந்தது 25,000 தோட்ட தொழிலாளர்களுக்கு வீடுகளை கட்டி கொடக்க கோரி வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தின் தோட்ட தொழிலாளர்கள் ஒன்று கூடுகிறார்கள்.
தோட்ட தொழிலாளர்களுக்கான வீட்டுரிமைச் சட்டத்தை
பிஎஸ்எம் கட்சி அறிமுகப்படுத்தி உள்ளது என்று அதன் துணை தலைவர் அருட்செல்வம் இன்று தெரிவித்தார்.
தோட்ட சமூக ஆதரவு குழு தோட்ட தொழிலாளர்களுக்கான வீட்டு உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த விரும்புகிறது.
அந்த அடிப்படையில் தோட்ட தொழிலாளர்களுக்கான வீட்டுரிமைச் சட்டத்தின் கீழ் நாடு தழுவிய அளவில் 25,000 தொழிலாளர்களுக்கு வீடுகளை கட்டி கொடுக்க அரசாங்கம் முன் வர வேண்டும் என்றார் அவர்.
வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஒன்று கூடும் போது தோட்ட தொழிலாளர்களுக்கான வீட்டுரிமைச் சட்டத்தின் மகஜரை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அல்லது அமைச்சரிடம் ஒப்படைப்போம்.
சுமார் 100 க்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் ஆகஸ்ட் 13 ஆம் தேதி ஒன்று கூடுகிறார்கள் என்று அவர் சொன்னார்.
தோட்டத்தில் பத்து ஆண்டுகள் முன்பு வாழ்ந்த முன்னாள் தோட்ட பாட்டாளிகள் மற்றும் இன்னமும் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு வீடுகளை கட்டி கொடுக்க சுமார் 2.5 பில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவைப்படும்.
தொழிலாளர்களுக்கு வீடுகளை கட்டி கொடுக்க தோட்ட நிறுவனங்களிடம் போதுமான நிலங்கள் உள்ளன என்று அவர் சொன்னார்.
தொழிற்சங்க வாதிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கான வீட்டுரிமைச் சட்ட நகலை சட்டத்துறை அமைச்சர் அஸாலினா ஒஸ்மான், துணை அமைச்சர் குலசேகரன் மற்றும் மனித வளம் அமைச்சர் ஸ்டீவன் சிம் ஆகியோர் மதிப்பீடு செய்யலாம் என்று அவர் சொன்னார்.
இன்று பிஎஸ்எம் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

