
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் ஆக 3-
இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு அமைச்சரவையில் தமிழ் பேசும் அமைச்சர் தேவை என்று பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.
தமிழ் பேசும் அமைச்சரை உடனடியாக நியமிக்கப்பட வேண்டும்.
அப்போதுதான் இந்தியர்களின் குரல் குறிப்பாக தமிழரின் குரல் அமைச்சரவையில் ஒலிக்கும்.
இப்போது அமைச்சரவையில் தமிழ் பேசக்கூடிய ஒரு தமிழ் அமைச்சர் இல்லை என்பது பெரும் வேதனையை அளிக்கிறது.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 ஆவது மலேசிய திட்டத்தில் இந்திய சமுதாயத்திற்கு என்று பெரிதாக எதுவும் இல்லை.
இதற்கு காரணம் நம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றி பேச அமைச்சரவையில் பேச ஆள் இல்லை.
மலேசிய இந்தியர்களின் மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினர் தமிழ் பேசக் கூடியவர்கள்.
ஆகவே இதை அரசாங்கம் சீர் தூக்கி பார்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
கோலாலம்பூர் கம்போங் அத்தாப்பில் பிபிபி கட்சியின் மத்திய செயலவை கூட்டத்திற்கு பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

