

மா.பவளச்செல்வம்
கோலாலம்பூர் ஆக 28-
எஸ்பிஎம் மற்றும் எஸ்டிபிஎம் தேர்வில் இந்திய மாணவர்கள் தமிழ் மொழி பாடத்தில் சிறப்பு தேர்ச்சி பெற வரும் அக்டோபர் 5 ஆம் தேதி மலாயா பல்கலைக்கழகத்தில் சிறப்பு கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது என்று ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இயக்குனர் சுரேந்திரன் கந்தா தெரிவித்தார்.
அக்டோபர் 5 ஆம் தேதி காலை 8.00 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த கல்வி கருத்தரங்கில் எஸ்பிஎம் பிரிவில் 200 மாணவர்கள் மற்றும் எஸ்டிபிஎம் பிரிவில் 100 மாணவர்கள் கலந்து கொள்வார்கள்.
கடந்த ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் 7,100 இந்திய மாணவர்கள் தமிழ் மொழி தேர்வை எழுதினர்.
இதில் 29 விழுக்காடு மாணவர்கள் A பெற்றனர். 69 விழுக்காடு மாணவர்கள் ஏ எடுக்காவிடில் தேர்ச்சி பெற்றனர்.
4 விழுக்காடு மாணவர்கள் தோல்வி அடைந்தனர்.
இந்த ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் தமிழ் பாடத்தை எடுக்கும் இந்திய மாணவர்கள் சிறப்பு தேர்ச்சி பெற இந்த கருத்தரங்கு முக்கிய பங்காற்றும்.
நமது மாணவர்கள் இப்போதே தேர்வுக்கு தயாராகும் வகையில் கல்வி கருத்தரங்கு மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார் அவர்.
வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை தேசிய தமிழ் கட்டுரை எழுதும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
ஆரம்ப பள்ளி, படிவம் 1 முதல் 3 வரை மற்றும் படிவம் 4 முதல் 5 வரைக்குமான மாணவர்கள் இதில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இது தவிர்த்து அடுத்த ஆண்டு தமிழ் கல்வி மாநாடு மிகப் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப் படும்.
அறிவை கொண்டாடுவோம், அடையாளத்தை வலுப்படுத்துவோம் மற்றும் தலைமுறைகளை சக்தி வாய்ந்ததாக மாற்றுவோம் என்ற சிந்தனையோடு இந்த தமிழ் கல்வி மாநாடு ஏற்பாடு செய்யப்படும்.
இந்த முயற்சிகள் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் அமைய சமூக தலைவர்கள், கல்வி மான்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் ஊடகவியலாளர்கள் அடங்கிய ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

