

சிலாங்கூர் மாநில அரசு சார்பில் இந்தியர்களுக்கான மானியங்கள் தொடர்ந்து வழங்கப்படும் என்று ஆட்சிக்குழு உறுப்பினர் வீ கணபதி ராவ் உறுதியளித்தார்.
ஆண்டுதோறும் தமிழ்ப் பள்ளிகளுக்கு 50 லட்சம் வெள்ளி, கோவில்களுக்கு 18 லட்சம் வெள்ளி, இந்திய மாணவர்களின் உயர் கல்வி நிதிக்கு 30 லட்சம் வெள்ளி, வசதி குறைந்த தமிழ்ப் பள்ளி மாணவர்களின் இலவச பேருந்து கட்டணம் 10 லட்சம் வெள்ளி, ஐ சீட் எனப்படும் இந்திய தொழில் முனைவர்கள் வியாபாரத்தில் ஈடுபட பொருட்கள் வாங்க 10 லட்சம் வெள்ளி இப்போது வழங்கப் பட்டு வருகிறது.
இனி வரும் காலங்களில் இந்தியர்களுக்கான இந்த மானியங்கள் முறையாக வழங்கப் படும் என்று அவர் உறுதியளித்தார்.
சிலாங்கூர் மாநில அரசு சார்பில் நேற்று ரவாங்கில் மாபெரும் அளவில் தைப்பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது.
சிலாங்கூர் மாநில அரசு இந்திய சமுதாயத்திற்கு மதிப்பளித்து ஒவ்வொரு ஆண்டும் தைப் பொங்கல் விழாவை மூன்று இடங்களில் தைப்பொங்கல் விழா நடத்தி வருகிறது என்றார்.
கடந்த பத்து ஆண்டுகளாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற முறையில் 19 தமிழ்ப் பள்ளிகளுக்கு நில உரிமை மற்றும் 200 க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு நிலப் பட்டாவை பெற்றுத் தந்துள்ளேன்.
நான் தீமிர் பிடித்தவன்தான். ஆனால் சிலாங்கூர் மாநில அரசு வழங்கும் மானியத்தை திருடியது இல்லை.
ஒரு சுத்தமான ஆட்சிக்குழு உறுப்பினராக நான் விடை பெறுவேன் என்று பலத்த கரவொலிக்கிடையே அவர் தெரிவித்தார்.

