
தேசிய கல்வி ஆலோசனைக் குழுவில் ஓர் தமிழர் இடம் பெறுவது தொடர்பில் மிக விரைவில் ஒரு சந்தோசமான செய்தி வெளியிடப்படும் என்று மனித வள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்.
இன்று காலையில் கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக்கை அவரது அமைச்சில் சந்தித்து 30 நிமிடங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தினேன்.
நாட்டில் உள்ள 528 தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம், மேம்பாடுகள் குறித்து பேசுவதற்கு தேசிய கல்வி ஆலோசனைக் குழுவில் தமிழ் படித்த ஓர் தமிழர் இடம் பெறாமல் போனதால் சமுதாயத்தின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதை கல்வி அமைச்சரிடம் எடுத்துரைத்தேன்.
இது மொழி சம்பந்தப்பட்ட உணர்ச்சிமிக்க விவகாரம். மலேசியத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஓர் தமிழர் தேசிய கல்வி ஆலோசனைக் குழுவில் இடம் பெற செய்யுங்கள் என்று கல்வி அமைச்சரை கேட்டுக் கொண்டேன்.
சமுதாயத்தின் சார்பில் நான் முன் வைத்த கோரிக்கையை கல்வி அமைச்சர் மிக கவனமுடன் கேட்டுக் கொண்டார்.
மிக விரைவில் இது தொடர்பில் ஒரு சந்தோசமான செய்தியை கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக் வெளியிடுவார்.
இப்போதைக்கு இந்த விவகாரம் நல்ல முறையில் தீர்வு காணப்பட்டுள்ளது.
தேசிய கல்வி ஆலோசனைக் குழுவில் ஓர் தமிழர் இடம் பெற வேண்டும் என்று சமுதாய உணர்வோடு குரல் கொடுத்த அனைத்து தரப்பினருக்கும் இவ்வேளையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினருமான வ. சிவகுமார் தெரிவித்தார்.

