பேராக்கில் வரலாற்றுப்பூர்வ திருமுருகர் மாநாடு

முதல் முறையாக பேராக் மாநில அரசின் ஆதரவிலும், ஏற்பாட்டிலும் திருமுருகர் மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாடு கோப்பெங் கம்போங் கபாயாங் ஸ்ரீ சிவ சுப்பிரமணிய ஆலய மண்டபத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வு வரும் 16.11.2025 (ஞாயிற்றுக்கிழமை), காலை மணி 7.00 க்கு தொடங்கி மதியம் 1.00 மணிக்கு முற்றுப்பெறும் என்று பேராக் இத்திய சமூக நலத்துறை, சுகாதாரம், மனிதவளம், ஒற்றுமைத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.

இம்மாநாடு பல இயக்கங்களுடன் ஒன்றிணைந்து  ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. அவற்றில், மலேசிய இந்து சங்கம் பேராக் மாநில பேரவை, மலேசிய இந்து தர்ம மாமன்றம் பேராக் மாநிலம், பேராக் மாநில இந்து அர்ச்சகர் சங்கம், ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் ஆலயம் கம்போங் கபாயாங், ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா, பேராக் மாநில தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் கழகம், பேராக் அருணகிரிநாதர் மன்றம்  மற்றும் இதர இயக்கங்களின் ஆதரவோடு இம்மாநாடு நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

மாநாட்டில் சிறப்பு மலர் ஒன்று வெளியிடப்படும். இதில் சுமார் 2 ஆயிரம் இந்து சமயத்தினர் கலந்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், சிறப்பு பேச்சாளராக சிவஸ்ரீ முத்துக்குமர சிவாச்சாரியார், சிவஸ்ரீ டினேஸ் வர்மன், முனைவர் மு.சங்கரன் ஆகியோர் பங்கேற்பார்கள். அத்தடன், திருப்புகழை டாக்டர் பண்பரசி அவர் தம் குழுவினருடன் இணைந்து படைப்பார் என்று அவர் சொன்னார்.

சமய விழிப்புணர்வு இந்து சமய அன்பர்களிடம் மேலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, உயர்கல்வி கூடங்கள், இடைநிலைப்பள்ளி மாணவர்களால் பல்வேறு பிரச்சினைகள் தற்போது தலைவிரித்தாடுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இம்மாநாடு அமையலாம். ஆகையால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளையும் இம்மாநாட்டிற்கு அழைத்து வர வரவேற்கப்படுவதாக அவர் அறிவுறுத்தினார்.

இம்மாநாடு நடக்கும் வேளையில் இந்த ஆலய வளாகத்தில் ஆன்மீக பொருட்கள் அல்லது உபகரணங்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த பொருட்களை வியாபாரம் செய்ய எண்ணுவோர் முத்துசாமியை தொடர்புக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles