
துடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடித்து 13 பேர் பலியாகினர். 20 பேர் படுகாயமடைந்தனர். கார் வெடித்ததை தொடர்ந்து அருகிலிருந்த பல வாகனங்கள் தீக்கிரையாகின.
இது தீவிரவாத செயலா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் என்ஐஏ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. டெல்லி கார் குண்டுவெடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
* பிரதமர் மோடி ஆலோசனை
செங்கோட்டை குண்டுவெடிப்பை தொடர்ந்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி நிலைமையை கேட்டறிந்தார். அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி, அமித்ஷாஷடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.
* அதிர்ச்சி அளிக்கிறது முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடிப்புச் சம்பவத்தில் அப்பாவி உயிர்கள் பல பலியாகியுள்ளது அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அளிக்கிறது. சம்பவ இடத்தில் இருந்து வரும் காட்சிகளைக் கண்டு மனமுடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோர் மனவுறுதியோடு விரைந்து நலம் பெற விழைகிறேன்.

