
இந்துக்களின் மாண்பை தொடர்ந்து காத்திடும் வகையில் இந்து சமய நெறிமுறைகளுடன் தைப்பூச வழிபாட்டில் பங்கேற்போம் என சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஆர்.ரமணன் வலியுறுத்தினார்.
கோவிட்-19 பெருந்தொற்றினால் மூன்றாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு வழக்க நிலையில் கொண்டாடப்படும் இவ்வாண்டு தைப்பூச விழாவில், நாடு முழுமையுமுள்ள முருகன் ஆலயங்களில் அதிகமான பக்தர்கள் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டில் இந்துக்களின் தாய்க்கோயிலாகத் திகழும் உலகப் பிரசித்திப்பெற்ற பத்துமலை ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் திருத்தலத்தில் சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வர் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
சுற்றுப்பயணிகள் உட்பட நம் நாட்டின் மற்ற இனத்தவர்களின் கவனத்தையும் ஈர்க்கக்கூடிய தைப்பூச விழாவானது, கட்டுப்பாடுகளோடும் சமய நெறிமுறைகளோடும் கொண்டாடப்படுவதில் இந்துக்களாகிய நம் அனைவரின் பங்கும் இருக்க வேண்டும் என டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.
குறிப்பாக, ஆலய வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது மிகப் பெரிய பொறுப்பு என சுட்டிகாட்டிய அவர், அந்த பொறுப்பின் மீது முழு அக்கறைக் கொண்டு தன்னார்வ அடிப்படையில் குழுவாக இணைந்து குப்பைகளை அகற்றும் நற்காரியத்தில் ஈடுபட்டு வருகின்ற இளையோர் படையினருக்கு தமது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

