
ஜொகூர் பாரு, மார்ச் 31-
தினத்தந்தி இணையதள செய்தியாளர் களிதாஸ் சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலரான சந்திர சேகரன் ஆறுமுகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கெடா மாநிலத்தின் கூலிம் மாவட்ட காவல் தலைமையகத்தில் போலீசாரால் ‘அத்துமீறல்’ என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்ட அந்த செய்தியாளர் ஒரு நாள் கழித்து இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 26 ஆம் தேதி, திரு களிதாஸ் சுப்ரமணியம் உட்பட சில சமூக அமைப்பாளர்கள் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து கூலிம் ஹை-டெக் பார்க் பகுதிக்கு சென்றிருந்தனர்.
அங்கு 300-க்கும் மேற்பட்ட சட்டவிரோத வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டை பற்றிய செய்தி சேகரிக்க அவர்கள் சென்றிருந்தனர்.
இந்த நேரத்தில் அவரை கைது செய்தது பத்திரிக்கை சுதந்திரத்தை முடக்குவதற்குச் சமம் என திரு சந்திர சேகரன் தெரிவித்துள்ளார்.
முறையான தகவல் துறையில் பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ ஊடக அட்டை வைத்திருந்தும் இந்த கைது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
மேலும், திரு களிதாஸ் சுப்ரமணியத்தை ‘அத்துமீறல்’ குற்றச்சாட்டுடன் தொடர்புபடுத்தியது பல கேள்விகளை எழுப்புகிறது என்றும் திரு சந்திர சேகரன் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு செய்தியாளர் தனது கடமையைச் செய்ததற்காக அவரை கைது செய்வது தேவையற்றது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

