
ஈப்போ,மே 3-
பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அச்சங்கத்தின் புரவலர் வழக்கறிஞர் தமிழ்த்திரு ம.மதியழகன் அவர்களின் ஆதரவோடு நாட்டின் எழுத்தாளுமைகளில் ஒருவரும் நவீன இலக்கியச் சிந்தனையாளர் எனவும் போற்றப்படும் எழுத்தாளர் கோ.முனியாண்டியின் நினைவாக கவிஞர் கோமு புதுக்கவிதைப் போட்டி 2.0 தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அதன் தலைவர் சிவாலெனின் தெரிவித்தார்.
இப்புதுக்கவிதைப் போட்டியில் மலேசியர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் எனவும் ஒருவர் ஒரு கவிதையை மட்டுமே போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கூறிய சிவாலெனின் படைப்பாளர்கள் தங்களின் கவிதையோடு அக்கவிதை சுயமாக எழுதப்பட்டது என்றும் அச்சு ஊடகம் மற்றும் சமூக ஊடகங்களில் அக்கவிதை வெளிவரவில்லை என்ற உறுதி கடிதத்தையும் மின்னஞ்சல் செய்ய வேண்டும் என்றார்.
புதுக்கவிதைப் போட்டியில் தேர்வு செய்யப்படும் கவிதைகளை நூலாக்கம் செய்யும் உரிமை பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு உண்டு என்பதையும் படைப்பாளர்கள் அந்த உறுதி கடிதத்தில் குறிப்பிட வேண்டும்.
இக்கவிதைப் போட்டியில் வெற்றி பெறும் வெற்றியாளர்களுக்கு முதல் பரிசாக வெ.1500.00, 2ஆவது பரிசு வெ.1000.00, 3ஆவது பரிசு வெ.750.00 ஆகியவற்றோடு ஆறுதல் பரிசாக எழுவருக்கு வெ.100.00 வழங்கப்படும் என்றும் தெரிவித்த சிவாலெனின் போட்டியில் பங்கெடுக்கும் அனைவருக்கும் மின்சான்றிதழும் வழங்கப்படும் என்றார்.
மேலும்,கோமு புதுக்கவிதைப் போட்டி 04.05.2026 தொடங்கி 04.06.2026ஆம் நாளோடு நிறைவு பெறும் என்றும் சிவாலெனின் கூறினார்.
எழுத்தாளர்கள் தங்களின் படைப்புகளை peraktamilwriters@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு WORDS மற்றும் PDF வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.
இப்புதுக்கவிதைப் போட்டி குறித்த கூடுதல் தகவலுக்கு 016-5684302 என்னும் எண்ணில் சிவாலெனினைத் தொடர்பு கொள்ளலாம்.

