
ஜோகூர் பாரு, மே 17 –
இன்று தொடங்கியுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான பக்காத்தான் ஹராப்பான் (PH) மாநாடு, நாட்டின் மிக உன்னதமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான புதிய சூத்திரங்கள் மற்றும் உத்திகளை வகுப்பதற்கு உறுப்புக்கட்சி உறுப்பினர்களுக்குக் கிடைத்துள்ள ஒரு மிகச்சிறந்த தளமாகும் என்று மாநாட்டு இயக்குநர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாநாடு மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலேசிய மக்களின் நல்வாழ்வை முதன்மையாகக் கொண்டு, பிரதிநிதிகள் அனைவரும் தங்களின் சிறந்த கருத்துகளையும் ஆற்றலையும் ஒன்றிணைப்பதற்கான ஒரு பொன்னான வாய்ப்பை இம்மாநாடு வழங்கியுள்ளது என்று தகவல் தொடர்பு அமைச்சருமான டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் சுட்டிக்காட்டினார்.
மாநாட்டின் வரவேற்புரையில் பேசிய அவர், தற்போது நேர்மறையான மற்றும் யாராலும் மறுக்க முடியாத பல நற்பலன்களைத் தந்து கொண்டிருக்கும் ‘மடாணி அரசாங்கத்தின்’ (Kerajaan MADANI) சாதனைகளை மறுமதிப்பீடு செய்வதற்கான ஒரு முக்கியக் களமாகவும் இம்மாநாடு திகழ்கிறது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

