



மஞ்சோங், மே 28 –
மனித வாழ்வை உயர்வடையச் செய்யும் ஆன்மிகச் சிந்தனை, நல்லொழுக்கம் மற்றும் மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கில் மலேசிய சைவ சமயம் பேரவையின் ஏற்பாட்டிலும் சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் ஆதரவிலும் நடைபெற்ற “மக்களைச் சந்திப்போம் – 5” சிறப்பு சமயக் கருத்தரங்கு, சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சமூக நல்லிணக்கத்தையும் ஆன்மிக விழிப்புணர்வையும் வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், சமயத்தின் வழியாக மனித வாழ்க்கையில் ஏற்படும் உயரிய மாற்றங்கள் குறித்து பல ஆன்மிக அறிஞர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர்.
“வழிபாடு ஒரு நெறி” என்ற தலைப்பில் உரையாற்றிய சமயச் சொற்பொழிவாளர் சிவத்திரு பூபாலன் பூவன், வழிபாடு என்பது வெறும் சடங்கல்ல; மனிதனை ஒழுக்கம், உயர்ந்த சிந்தனை மற்றும் ஆன்மிகப் பயணத்தின் வழியே முன்னேற்றும் ஒரு வாழ்வியல் நெறி எனக் குறிப்பிட்டார்.
இறைநம்பிக்கை மனித மனதில் அமைதி, சமநிலை மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்கும் சக்தி கொண்டது என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து உரையாற்றிய ஆன்மிக அறிஞர் சிவத்திரு செல்வகுமாரன் நடராஜன், இறை வழிபாட்டின் உண்மையான வெளிப்பாடு மனிதநேயச் செயல்களில் வெளிப்பட வேண்டும் என்றார்.
தன்னலமற்ற சேவை, கருணை மற்றும் பிறருக்காக செய்யப்படும் உதவியே உயர்ந்த வழிபாடாகக் கருதப்பட வேண்டும் என அவர் எடுத்துரைத்தார்.
வாழ்க்கையின் சவால்கள் மற்றும் மன அழுத்தங்களை சமாளிக்க ஆன்மிக சிந்தனை ஒரு வலுவான ஆதாரமாக அமைகிறது என சமயச் சொற்பொழிவாளர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் தெரிவித்தார். வழிபாடு மனித மனதிற்கு தைரியத்தையும் உள்ளார்ந்த அமைதியையும் வழங்கி, வாழ்க்கையை நிலைநிறுத்தும் சக்தியாக விளங்குகிறது என்றும் அவர் கூறினார்.
மேலும், நாயன்மார்கள் போற்றிய “பிள்ளைச் செல்வம்” என்பது பொருளாதார வளத்தை அல்லாது, பக்தி, பணிவு மற்றும் நல்லொழுக்கம் கொண்ட தலைமுறையையே குறிக்கும் என ஆன்மிக அறிஞர் சிவத்திரு மணிமாறன் கோவிந்தராஜ் விளக்கினார். தூய எண்ணங்களும் இறைபக்தியும் இணைந்த வாழ்வே மனிதனை உயர்வின் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, உலு சிலாங்கூர் மாவட்டம் கெர்லிங் பகுதியில் உருவாகவுள்ள சைவத் திருக்கோயிலும் சைவக் கல்லூரியும் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. சைவ சித்தாந்தம், ஆகமம், திருமுறை மற்றும் தமிழ் பண்பாட்டை எதிர்கால தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
சுமார் 7.5 ஏக்கர் பரப்பளவில் பல கட்டங்களாக உருவாகவுள்ள இத்திட்டத்தில் சைவக் கல்லூரி, விடுதி, நூலகம், ஆய்வு மையம், தியானக் கூடங்கள் மற்றும் உலகத் தர மாநாட்டு அரங்கம் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறவுள்ளன. ஆன்மிகத்தையும் நவீன கல்வியையும் ஒருங்கிணைக்கும் மையமாக கெர்லிங் உருவெடுக்கும் என சிவத்திரு பூபாலன் பூவன் தெரிவித்தார்.
ஆசிரியர் கணேசன் சண்முகம் அவர்களின் சிறப்பான ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், மஞ்சோங் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர், இந்து சமய அமைப்புகளின் பொறுப்பாளர்கள், ஆலய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

