


கோலாலம்பூர் மே 29-
Buku Kebangsaan Malaysia ஏற்பாட்டில்
43 ஆவது கோலாலம்பூர் அனைத்துலக புத்தகக் கண்காட்சி (PBAKL) மே 29 முதல் ஜூன் 7, 2026 வரை கோலாலம்பூர் உலக வாணிப மையத்தில் (WTCKL) மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இந்த மாபெரும் புத்தகத் திருவிழாவில், 1,200-க்கும் மேற்பட்ட கண்காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை புத்தக கண்காட்சி திறந்திருக்கும்.
நுழைவு அனுமதி இலவசம்.இந்தக் கண்காட்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளியீட்டாளர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்பதோடு, தமிழ், மலாய், ஆங்கிலம் மற்றும் பல மொழிகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனையில் உள்ளன.
இந்த அனைத்துலக புத்தக கண்காட்சியில் நாட்டில் புகழ்பெற்ற குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனையில் உள்ளன.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறப்பு வருகை தந்து அனைத்துலக புத்தக கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.


இந்த விழாவில் கல்வி அமைச்சர் பாட்லினா சீடேக், துணை கல்வி வோங் கா வா, உயர் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஸம்ரி அப்துல் காடீர் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புத்தக கண்காட்சியை தொடக்கி வைத்த பின்னர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பல புத்தக கூடங்களுக்கு சென்றார்.
அப்போது மூன்றாவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ள குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் புத்தக கூடத்திற்கு வருகை தந்த போது குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு. செல்வராஜூ அன்போடு வரவேற்றார்.
பின்னர் மும்மொழியில் தயாரிக்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை டத்தோ டாக்டர் செல்வராஜூ மற்றும் குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குமாரி பார்கவி ஆகியோர் பிரதமருக்கு அன்பளிப்பு செய்தனர்.
உடனே திருக்குறள் புத்தகத்தை புரட்டி பார்த்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறளையும் படித்து காட்டி அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தினர்.

