வலிமையான கூட்டுறவு கழகமாக கோபிரிமாஸை கொண்டு செல்ல இலக்கு! டத்தோ சுரேஸ் கோவிந்தசாமி அறிவிப்பு

கோலாலம்பூர் ஜூன் 5-
கோப்பிரிமாஸ் 13 ஆம் ஆண்டு பொதுக் கூட்டம் இன்று புக்கிட் கியாரா சிலாங்கூர் கிளப்பில் அதன் தலைவர் டத்தோ சுரேஸ் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட
கோபிரிமாஸ் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் பிரிமாஸ் உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் தமது உரையைத் தொடங்கினார்.

கோபிரிமாஸ் இதற்கு முன்பே பல்வேறு வணிக முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

அவற்றில் கறித்தூள், அரிசி, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை போன்ற பொருட்களை உறுப்பினர்களுக்கு வழங்கியதும் அடங்கும்.

எனினும், உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் கூட்டுறவு முன்னேற முடியாது.

உணவகத் துறையின் செலவுகளைக் கட்டுப்படுத்த உதவும் பல யோசனைகளும் திறன்களும் கோபிரிமாஸிடம் உள்ளன.

குறிப்பாக மூலப்பொருட்கள் வழங்கும் துறையில். தற்போது உள்ள வழங்குநர் வலையமைப்பின் மூலம், தேவையான பொருட்களை குறைந்த விலையில் பெற்று, கூட்டுறவு உறுப்பினர்களுக்கு போட்டித்தன்மை வாய்ந்த விலையில் வழங்க முடியும்.

ஆனால், ஒரு கூட்டுறவாக நாம் கடன் அடிப்படையிலான விற்பனையையோ அல்லது தவணை முறையிலான கட்டண வசதியையோ வழங்கும் திறன் இல்லை யென்பதை புரிந்துகொள்வது முக்கியம்.

எனவே, உறுப்பினர்கள் பணமாகக் கட்டணம் செலுத்த முன்வந்தால், இந்தப் பொருட்களை சந்தை விலையை விட குறைந்த விலையில் தொடர்ந்து வழங்க நாங்கள் முயற்சிப்போம் என்று அவர் சொன்னார்.

அதோடு, கோபிரிமாஸ் மேலும் சில வணிகத் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

அவற்றில் தீயணைப்பு கருவிகள் பராமரிப்பு மற்றும் விநியோகம், மேலும் HR-One Stop Centre சேவைகளும் அடங்கும்.

துரதிர்ஷ்டவசமாகஇந்தச் சேவைகளுக்கு இதுவரை போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் இவை கூட்டுறவிற்கு வருமானம் ஈட்டுவதோடு, உறுப்பினர்களுக்கும் நீண்டகால நன்மைகளை வழங்கக்கூடியவை.

நாம் அனைவரும் அறிந்திருப்பதுபோல், தொழிலாளர் ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகள் தற்போது அதிகரித்து வருகின்றன.

ஏதேனும் புகார் அளிக்கப்பட்டால், அதிகாரிகள் தொழிலாளர்களின் கோப்புகள் மற்றும் செயல்பாட்டு பதிவுகள் அனைத்தையும் முழுமையாக ஆய்வு செய்வார்கள்.

தேவையான ஆவணங்கள் முழுமையாக இல்லாதிருப்பது, முதலாளிகளுக்கு கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

நாங்கள் வழங்கும் HR-One Stop Centre சேவையின் மூலம், தொழிலாளர்களின் அனைத்து ஆவணங்களும் சட்டத் தேவைகளுக்கு ஏற்ப முழுமையாகத் தயாரித்து வழங்கப்படும்.

இது முதலாளிகளின் நிர்வாகச் சுமையை குறைப்பதோடு, தொழிலாளர் சட்டங்களின் இணக்கத்தன்மை மற்றும் தொழிலாளர் சட்டம் (Akta Buruh) பின்பற்றப்படுவதை உறுதி செய்ய உதவும்.

இந்த முயற்சிகளை அனைத்து உறுப்பினர்களும் ஒரு சுமையாக அல்லாமல், ஒரு வாய்ப்பாகக் கருதுவார்கள் என்று நாங்கள் மனமார நம்புகிறோம்.

தங்களின் ஆதரவுடன், இந்தக் கூட்டுறவுச் சங்கத்தை அனைவரின் நலனுக்காக இன்னும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும்.

ஒன்றிணைந்து, மேலும் வலிமையானதும் வெற்றிகரமானதுமான கூட்டுறவுச் சங்கத்தை உருவாக்குவோம் என்று அவர் தமது உரையில் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles