
ஜொகூர் பாரு, ஜூன் 20—
சிங்கப்பூருக்கு தினமும் பயணம் செய்து பணிபுரியும் சுமார் 400,000 மலேசியர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ‘ஸ்கிம் பெங்கெம்பாரா’ (Skim Pengembara) திட்டத்திற்கான வரைவு அறிக்கை தயாராக இருப்பதாகவும், அது எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவிருப்பதாகவும் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்திற்கான வரைவு அறிக்கை அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ளதை அவர் உறுதிப்படுத்தினார்.

இது தொடர்பான கலந்துரையாடல் ஆவணங்கள் மற்றும் ஒப்புதல் பெறுதல் போன்ற அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்துள்ள நிலையில், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
“ஜொகூர் மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்த இந்தத் திட்டம், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் வழிகாட்டலில், எனது மற்றும் எனது துணை அமைச்சரின் மேற்பார்வையில் மிக விரைவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.
இன்று ஜொகூர் பாருவில் நடைபெற்ற ‘Pocket Talk HRD Corp’ சுற்றுப்பயண நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மலேசிய சமூகப் பாதுகாப்பு அமைப்பின் (பெர்கெசோ) கீழ் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம், சிங்கப்பூருக்கு தினமும் பயணம் செய்து பணிபுரியும் மலேசியர்களுக்குப் பெரும் பலனைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

