


ஈப்போ ஜெலாபாங் கம்போங் டத்தோ அமாட் சைட் தம்பாஹான் 2 இல் டுவாவில் அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலுக்கு மனித வள அமைச்சர் வ சிவகுமார் 15,000 வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.
இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
இந்நிலையில் இன்று ஆலயத்திற்கு சிறப்பு வருகை புரிந்த மனித வள அமைச்சர் சிவகுமாருக்கு ஆலய நிர்வாகத்தினர் உற்சாக வரவேற்பை நல்கினர்.
இந்த மங்களகரமான தருணத்தில், சில வார்த்தைகளைச் சொல்ல இந்த வாய்ப்பைப் பெற்றதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் என்று மனித வள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
ஜெலாபாங் வட்டாரத்தில் அமைத்திருக்கும் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகத்தை மிகவும் விமரிசையாக நடத்தி முடித்த ஆலய நிர்வாக உறுப்பினர்களுக்கும் சுற்றுவட்டார மக்களுக்கும் எனது முதற்கண் வணக்கத்தையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்
கொள்கிறேன்.
இந்த ஆலய நிர்வாகத்தினர் சமயம் மற்றும் அறப்பணிகளில் சிறந்து விளங்க மனமார வாழ்த்துகிறேன் என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
மேலும் ஆலயத்திற்கு 15,000 வெள்ளி நன்கொடை காசோலையை மனித வள அமைச்சர் சிவகுமார் நேரடியாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனித வள அமைச்சரின் தனிச் செயலாளர் மகேஸ்வரி உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

