

மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவை ஏற்பாட்டில் பரதன் கிண்ணக் கால்பந்து போட்டி வரும் ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்குகிறது என்று பேரவையின் தலைவர் டத்தோ சுப்ரா ரத்னவேலு தெரிவித்தார்.
கோவிட் நோய்த் தொற்று தாக்கத்தினால் இரண்டு ஆண்டுகள் தடைபட்டு போன பரதன் கிண்ணக் கால்பந்து போட்டி இம்முறை மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
கோலாலம்பூர், பினாங்கு, கெடா, பகாங், ஜொகூர், புத்ரா ஜெயா, பேராக், நெகிரி செம்பிலான், பெர்லிஸ், மலாக்கா, சிலாங்கூர்,போலீஸ் படை ஆகிய குழுக்கள் இம்முறை போட்டியில் பங்கேற்கிறது.
23 வயதுக்கு உட்பட்ட இளம் வீரர்கள் மட்டுமே பரதன் கிண்ணக் கால்பந்து போட்டியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.
பரதன் கிண்ணத்தை வெல்லும் சாம்பியன் குழுவுக்கு 20,000 வெள்ளியும் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் குழுவுக்கு 10,000 வெள்ளியும் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.
மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவையின் ஆண்டு பொதுக்கூட்டம் நேற்று காமன் வெல்த் கிளப்பில் நடைபெற்றது.
பேரவையின் தலைவர் டத்தோ சுப்ரா ரத்னவேலு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உதவித் தலைவர்கள் டத்தோ எஸ். பதி, டத்தோ அண்ணாமலை, செயலாளர் சந்தன ராஜூ, பொருளாளர் ஆறுமுகம், கவுன்சில் உறுப்பினர்கள் ஸ்ரீ சங்கர், சந்திரசேகரன், பாலகிருஷ்ணன், ஜெயகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

