

பேராக் மாநிலத்தில் தைப்பிங் லாரூட் ஜாலான் காக்கி புக்கிட் ஸ்ரீ தண்டாயுபாணி ஆலயம் தற்போது இருபது லட்சம் வெள்ளியில் கட்டப்பட்டு வருகிறது.
ஆலயத்தின் கட்டுமான பணிகளுக்கு இன்னும் நிதியுதவி தேவைப்படுகிறது என்று தைப்பிங் இந்து தேவலாயா சபா மனித வள அமைச்சரிடம் விண்ணப்பம் செய்தது.
இந்நிலையில் ஆலய கட்டுமான பணிகளுக்கு உதவும் வகையில் மனித வள அமைச்சர் வ. சிவகுமார் இன்று 50,000 வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்தார்
ஆலய நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று மனித வள அமைச்சர் சிவகுமார் இன்று ஆலயத்திற்கு நேரடி வருகை புரிந்து கட்டுமான பணிகள் பார்வையிட்டார்.
பின்னர் ஆலயத் தலைவர் ராஜா மற்றும் அதன் பொறுப்பாளர்களிடம் 50,000 வெள்ளி காசோலையை மனித வள அமைச்சர் சிவகுமார் ஒப்படைத்தார்.
தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் காவ் ஓ, பெக்கோங் அசாம் சட்டமன்ற உறுப்பினர் ong seng Quan, அவ்லோங் சட்ட மன்ற உறுப்பினர் தே கொக் லின்,சொக்சோ நிறுவனத்தின் இயக்குநர் டி கண்ணன், மூத்த அரசியல்வாதி சிம்மாதிரி உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

