நெகிரி செம்பிலான் தேர்தல்; தோல்விக்கு ஹரப்பான் தலைவர்கள் கூட்டு பொறுப்பு

சிரம்பான், ஆகஸ்ட் 3 — நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பக்காதான் ஹராப்பான் (ஹராப்பான்) கூட்டணி சந்தித்த தோல்விக்கு அக்கூட்டணியின் அனைத்துத் தலைவர்களும் கூட்டுப் பொறுப்பேற்பதாக அதன் தேர்தல் இயக்குனர் டத்தோ ஸ்ரீ அமிருதின் ஷாரி தெரிவித்தார்.

கூட்டணியின் உயர்மட்டத் தலைமை முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரை அனைவரும் இந்தத் தோல்விக்கான பொறுப்பை கூட்டாகச் சுமப்பார்கள் என்று அவர் கூறினார்.

இதற்காக எந்தவொரு தனிநபர், குழு, சமூகம் அல்லது பிரிவினரையும் தனிமைப்படுத்தி குற்றம் சாட்ட மாட்டோம் என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

நெகிரி செம்பிலான் தேர்தலில் போட்டியிட்ட 36 இடங்களில் பக்காத்தான் ஹரப்பான் 11 இடங்களை மட்டுமே வென்றது. அதே நேரத்தில் தேசிய முன்னணி(BN) 18 இடங்களையும், பெரிகாத்தான் நேஷனல் (PN) 7 இடங்களையும் பெற்றன.

தோல்விக்கான காரணங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த சிலாங்கூர் மெந்திரி பெசாருமான அமிருதின், சமூக ஊடகங்கள், முக்கிய ஊடகங்கள் மற்றும் வேட்பாளர்களின் வீட்டுக்கு வீடு நேரடி பிரச்சாரங்கள் மூலம் கூட்டணி, தகவலைக் கொண்டு சேர்க்க தங்களால் இயன்ற அனைத்தையும் செய்ததாகக் கூறினார்.

கூட்டணியின் தேர்தல் அறிக்கை நெகிரி செம்பிலான் முழுவதும் பரவலாக விநியோகிக்கப்பட்டது. எனினும் அது ஒரு முக்கிய பிரச்சாரப் பொருளாக மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டது என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

“துரதிர்ஷ்டவசமாக, தேர்தல் அறிக்கை விவாதப் பொருளாக மாறவில்லை. அதற்குப் பதிலாக, விவாதங்கள் அனைத்தும் இது மலாய்க்காரர்கள் அல்லது மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் பற்றியதா, அல்லது மக்கள் DAP கட்சியை ஆதரிக்கிறார்களா இல்லையா என்பதைச் சுற்றியே அமைந்திருந்தன,” என்று அவர் கூறினார்.

அடுத்த பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் மீதமுள்ள நிலையில், அரசாங்கத்தின் செயல்திறன், கொள்கைகள் மற்றும் மக்கள் சேவை ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து, தங்களது அரசியல் பிரச்சாரத் தகவல்களை மறுசீரமைக்க இக்கூட்டணி இந்த நேரத்தைப் பயன்படுத்தும் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles