



பத்துகாஜா, செப் 24-
போட்டிகள் என்பது ஆரோக்கியமான சிந்தனையையும் ஒற்றுமையின் சான்றாகவும் திகழ வேண்டும் என்பதை வலியுறுத்திய பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் வ.சிவகுமார் இப்பண்பு மாணவர் பருவத்திலேயே விதைக்கப்பட வேண்டிய மாண்பு என்றும் கூறினார்.
அதே வேளையில், நடைபெற்ற ஒருமைப்பாடு ஓட்டப்போட்டி ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் விதைக்கும் ஒன்றாகவும் அமைந்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.
மாணவர்களுக்காக பத்து காஜா நாடாளுமன்றத்தின் ஏற்பாட்டில் ஈப்போ கருடா ஓட்டப்பந்தைய இயக்கத்தின் ஆதரவோடு நடைபெற்ற பாப்பான் ஒருமைப்பாடு மராத்தோன் போட்டியின் நிறைவு விழாவில் மாண்புமிகு சிவகுமார் இவ்வாறு குறிப்பிட்டார்.
முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் இனி வருங்காலங்களிலும் இப்போட்டியைத் தொடர சாத்தியம் இருப்பதாகவும் கூறிய அவர் இப்போட்டியின் வழி பல்லினத்தைச் சார்ந்த மாணவர்களின் ஒற்றுமை,புரிந்துணர்வோடு,நட்பும் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளதோடு அவர்களிடையிலான அறிமுகமும் ஏற்பட்டு அவர்களின் எதிர்கால ஓட்டப்போட்டி பயணத்திற்கும் அது வழிவகுத்துள்ளதாக கூறினார்.
அதுமட்டுமின்றி, மராத்தோன் போன்ற போட்டிகள் வழியாக தங்களின் உடல் ஆரோக்கியத்தையும் உடல் வலிமையையும் மாணவர்கள் திறன்மிக்க நிலைக்கு உயர்த்தி கொள்ள முடியும் என்றும் கூறிய அவர் இப்போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் தொடர்ந்து தங்களைப் பயிற்சிக்கு உட்படுத்தி தேசிய அளவில் ஜொலிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.
மேலும்,மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க கருடா ஓட்டப்பந்தைய இயக்கம் தீவிரமாக இயங்கி வரும் நிலையில் பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளின் வெற்றிகளுக்காக பங்களிப்பு செய்ய வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.
அதுமட்டுமின்றி, விளையாட்டின் மூலமும் தங்களின் எதிர்காலத்தை மாணவர் சமூகம் உயர்த்தி கொள்ள முடியும் என்ற அவர் மாணவர் சமூகம் தங்களின் ஆற்றல் வழியாக உயர்ந்து நிற்கும் சாத்தியம் எல்லாத்துறையிலும் ஆளுமைக் கொண்டு விட்டதாகவும் தெரிவித்தார்.
மிகவும் சிறப்பாக நடைபெற்ற இப்போட்டி 12 வயதுக்கு உட்பட்டவர்கள்,15 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 18வயதுக்கு உட்பட்டவர்கள் என ஆண் – பெண் என மூன்று பிரிவுகளில் சிறப்பாக நடந்தேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

