

வெளிநாட்டு தொழிலாளர்கள் ஒதுக்கீட்டை அங்கீகரிக்கும் முன், மனிதவள அமைச்சு (KSM) மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை போதுமானதா என்பதை காத்திருந்து சரிபார்க்க வேண்டும் என்று மனிதவள அமைச்சர் வ.சிவக்குமார் சுட்டிக் காட்டினார்.
மேலும் மீண்டும் அந்நிய தொழிலாளர்களுக்கான அனுமதி முறையாக ஆராயப்படும் என்றார்.
முன்னதாக, வெளிநாட்டு தொழிலாளர் வேலைவாய்ப்பு தளர்வு திட்டம் (Pelan Kelonggaran Penggajian Pekerja Asing -PKPPA) உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர் ஒதுக்கீட்டின் விண்ணப்பம் மற்றும் ஒப்புதல் மார்ச் 18 முதல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.
மனித வள அமைச்சின் ஊழியர்களுடன் நடைபெற்ற நோன்பு திறப்பு விழாவிற்கு தலைமையேற்றப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவக்குமார் இவ்வாறு தெரிவித்தார்.
கூடுதல் ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்களைத் திறக்குமாறு தொழில்துறையினரிடமிருந்து அழைப்பு வந்தாலும், பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு தன்னிச்சையாக இதை செய்ய முடியாது.
“இப்போது நாங்கள் தொழிலாளர்களை அழைத்து வர முதலாளிகளுக்கு இடம் கொடுத்திருக்கிறோம்.
வெளிநாட்டு தொழிலாளர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பு கூடுதல் ஒதுக்கீட்டை வழங்க முடியாது.
முதலாளிகள் வெளிநாட்டு தொழிலாளர்களை அழைத்து வருவதற்காக நாங்கள் காத்திருக்கும் போது, எந்த ஒதுக்கீட்டையும் நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம்.
அது போதுமானதாக இல்லை என்றால், பின்னர் மற்றொரு முடிவு எடுக்கப்படும், என்று அவர் சொன்னார்.

