

புத்ரா ஜெயா மே 10-
மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவை ஏற்பாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பரதன் கிண்ணக் கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தை காண சிறப்பு வருகை புரியும்படி மனிதவள அமைச்சர் வ. சிவகுமாருக்கு நேரடி அழைப்பு விடுக்கப்பட்டது.
மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவை தலைவர் டத்தோ சுப்ரா ரத்னவேலு, துணை தலைவர் டத்தோ எஸ். சிவசுந்தரம் மற்றும் செயலாளர் சந்தான ராஜு ஆகியோர் இன்று மனிதவள அமைச்சர் சிவகுமாரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
எப்.ஏ.எம். எனப்படும் மலேசிய கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படும் ஒரே இந்தியர் கால்பந்து போட்டி பரதன் கிண்ணமாகும்.
நாட்டில் இளம் இந்திய கால்பந்து விளையாட்டாளர்களை உருவாக்கும் தளமாக பரதன் கிண்ணக் கால்பந்து போட்டி விளங்குகிறது.
தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது பரதன் கிண்ணக் கால்பந்து போட்டியில் மொத்தம் 12 மாநில குழுக்கள் கலந்து கொண்டுள்ளன.
மிக விரைவில் பரதன் கிண்ணக் கால்பந்து போட்டி இறுதியாட்டம் கோலாலம்பூரில் உள்ள அரங்கில் நடத்தப்படும்.
இறுதியாட்டத்தை தொடக்கி வைப்பதோடு வெற்றிபெறும் குழுக்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கி சிறப்பிக்க மனிதவள அமைச்சர் சிவகுமார் நேரடி வருகை புரியும்படி அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
பரதன் கிண்ணத்தை வெல்லும் குழுவுக்கு 20,000 வெள்ளியும் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் குழுவுக்கு 10,000 வெள்ளியும் பரிசுத் தொகையாக காத்துக் கொண்டிருக்கிறது என்று டத்தோ சிவசுந்தரம் தெரிவித்தார்.
பரதன் கிண்ணக் கால்பந்து போட்டியில் கோலாலம்பூர் குழு நடப்பு சாம்பியனாக வலம் வருகிறது.
இதனிடையே, பரதன் கிண்ணக் கால்பந்து போட்டி மூலம் இளம் வீரர்கள் உருவாக்கப்படுவது பாராட்டுக்குரியது என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

