



ஈப்போ மே 13-
பேராக் ஈப்போ இண்ட்ரா முலியா அரங்கில் நடைபெறும் அனைத்துலக ஒக்கினாவா கோஜூ ரியோ கராத்தே போட்டிக்கு மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் 50,000 வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.
பேராக் மாநில கராத்தே சங்கம் மற்றும் மலேசிய ஒக்கினாவா கோஜூ ரியோ கராத்தே கூட்டமைப்பு ஏற்பாட்டில் 19ஆவது அனைத்துலக கராத்தே போட்டியை மனிதவள அமைச்சர் சிவகுமார் நேற்று அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல நாடுகளில் இருந்து 1,300 கராத்தே விளையாட்டாளர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த முறை இந்த போட்டியின் ஏற்பாட்டுக் குழு தலைவராக நான் இருந்தேன்.
இம்முறை மனிதவள அமைச்சர் என்ற முறையில் உலக கராத்தே போட்டியைத் தொடக்கி வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
மேலும் இந்த உலக கராத்தே போட்டி வெற்றி பெறுவதற்கு மனிதவள அமைச்சு சார்பில் 50,000 வெள்ளியை ஏற்கெனவே வழங்கி விட்டேன் என்று பலத்த கரவொலிக்கிடையே அவர் அறிவித்தார்.
இந்த நிகழ்வில் கோலாலம்பூர் வெற்றி சிலம்பக் கழகத்தின் தலைவர் டாக்டர் பி.எஸ். பிள்ளை மற்றும் டத்தோ ஜெகா ஆகியோர் மனிதவள அமைச்சர் சிவகுமாருக்கு மாலை அணிவித்து சிறப்பித்தனர்.
பேராக் மாநில கராத்தே சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் மாஸ்டர் அனந்தன் அமைச்சருக்கு மாலை அணிவித்து நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

