


சிரம்பான் ஜூன் 18-
வேலை முடிந்து வீடு திரும்பிய போது சாலை விபத்தில் சிக்கி காயமுற்று வேலை செய்யும் சக்தியை இழந்த சந்திரன் ராமன் என்பவருக்கு இன்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் சொக்சோ நிறுவனத்தின் மூலம் 14,291 வெள்ளி சமூக நல பாதுகாப்பு நிதியை பெற்றுத் தந்து பேருதவி புரிந்தார்.
சிரம்பான் தாமான் டேசா திமியாங்கில் சந்திரன் இல்லத்திற்கு நேரடி வருகை புரிந்த மனிதவள அமைச்சர் சிவகுமார் நலம் விசாரித்தார்.
பின்னர் 14,291 வெள்ளி சொக்சோ சமூக நல நிதியுதவியை வழங்கினார்.
திருமணமாகி ஒரு குழந்தைக்கு தந்தையான சந்திரன் இப்போது மெது வேலையை தேடிவருகிறார்.
சொக்சோ நிறுவனத்தின் மூலம் இவருக்கு வேலையை பெற்றுத் தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சிவகுமார் தெரிவித்தார்.
பின்னர் சிரம்பான் தாமான் புக்கிட் கெலினா என்ற இடத்தில் லியோங் தாய் ஹி இல்லத்திற்கு நேரடி வருகை புரிந்த மனிதவள அமைச்சர் சிவகுமார் 2, 757 சொக்சோ சமூக நல நிதியுதவியை வழங்கினார்.
பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு சக்கர நாற்காலியும் வழங்கப்பட்டது.
மருத்துவ சிகிச்சை பரிசோதனையில் இவர்கள் இருவரும் சொக்சோவின் சமூக நல நிதியுதவி பெறுவதற்கு தகுதி பெற்றிருப்பதை மருத்துவர்கள் உறுதி படுத்தினர்.
மேலும் இவர்கள் சொக்சோ சந்தாரர்கள் என்பதால் சொக்சோ சமூக நல நிதியுதவியும் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர் என்று மனித வள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
சொக்சோ நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், காடேக் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சாமிநாதன் உட்பட பலரும் இன்றைய நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.

