

புத்ரா ஜெயா ஜூன் 28-
நாட்டில் இந்திய உணவகங்கள் தொடர்ந்து இயங்குவதற்கு போதுமான அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படுவதால் எங்களுக்கு தேவையான தொழிலாளர்கள் தந்து உதவும்படி பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்தியர் உணவக உரிமையாளர் சங்கம் இன்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமாரிடம் கோரிக்கையை முன் வைத்தது.
பிரிமாஸ் தேசிய தலைவர் சுரேஸ் கோவிந்தசாமி, துணை தலைவர் கிருஷ்ணன், செயலாளர் சண்முகம் மற்றும் ஆட்சிக் குழு உறுப்பினர் தயாளன் ஆகியோர் இன்று மனிதவள அமைச்சர் சிவகுமாரை அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பல ஆண்டுகளுக்கு பிறகு இந்திய உணவங்களில் வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்கள் எங்களுக்கு கிடைத்தார்கள்.
இதற்காக மனிதவள அமைச்சர் சிவகுமாருக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று பிரிமாஸ் தலைவர் சுரேஸ் கோவிந்தசாமி தெரிவித்தார்.
இதுவரை இந்திய உணவகங்களுக்கு 50 விழுக்காடு அந்நியத் தொழிலாளர்கள் கிடைத்துள்ளனர்.
இதன் வழி மூடப்படும் நிலையில் இருந்த இந்திய உணவகங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியிருக்கிறது.
இருப்பினும் இன்னும் கூடுதல் தொழிலாளர்கள் தேவைப்படுவதால் எங்களுக்கு தேவையான தொழிலாளர்களை தந்து உதவுங்கள்.
அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள அரசாங்கம் வாய்ப்பு வழங்கியது.
ஆனால் மார்ச் 18ஆம் தேதியோடு அந்நிய தொழிலாளர்களை எடுத்துக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.
மார்ச் 18ஆம் தேதிக்கு முன்னதாக விண்ணப்பம் செய்த இந்திய உணவக உரிமையாளர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து உதவும்படி அவர் கோரிக்கையை முன் வைத்தார்.
இந்திய உணவகங்களில் பணிபுரியும் அந்நிய தொழிலாளர்களுக்கு தங்கும் வசதி உட்பட அனைத்து வசதிகளையும் உணவக உரிமையாளர்கள் செய்து கொடுக்கிறார்கள்.
உணவகங்களில் வேலை செய்யும் அந்நிய தொழிலாளர்களின் வயது 45 கீழ் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை மறுபரிசீலனை செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
பிரியாஸ் முன் வைத்த பிரச்சனைகளுக்கு நல்ல முறையில் தீர்வு காண உள்துறை அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி முயற்சிகளை மேற்கொள்வேன் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
மேலும் மார்ச் 18 ஆம் தேதிக்கு முன்னதாக விண்ணப்பம் செய்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

