கோலாலம்பூர் ஜூலை 19-
மலேசியாவில் நடைபெறும் 11ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு திட்டமிட்டப்படி மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது என்று மனிதவள அமைச்சரும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழு தலைவருமான வ. சிவகுமார் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இருந்து 700 பேராளர்கள் வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மலேசியாவில் இருந்து 500 பேராளர்கள் மற்றும் 2,000 பார்வையாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
கோலாலம்பூரில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் ஜூலை 21 முதல் 23 வரை உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டுள்ளன.
நீண்ட நெடிய வரலாறு மற்றும் வளமான இலக்கியம் கொண்ட பழமையான மொழிகளில் ஒன்றாக விளங்கும் தமிழ்மொழி எதிர்நோக்கும் சவால்களை மையமாகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
இதற்கு முன்னர் 1966, 1987 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் மூன்று முறை உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை மலேசிய ஏற்று நடத்தியுள்ளது.
இப்போது 4 ஆவது முறையாக உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், OMS அறக்கட்டளையுடன் இணைந்து மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை இணைந்து நடத்துகிறது.
இந்தியா, ஆஸ்திரேலியா, சீனா, ஐரோப்பா, ஹாங்காங், மொரிஷியஸ், சிங்கப்பூர், இலங்கை, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து அறிஞர்கள், கவிஞர்கள் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வது பெருமையளிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஏற்பாட்டுக் குழு கூட்டத்தில் மனிதவள அமைச்சர் சிவகுமாருடன் ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவர் செந்தமிழ் செல்வர் ஓம்ஸ் பா. தியாகராஜன், இணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன், டத்தோ எம். பெரியசாமி, முனைவர் ராஜேந்திரன், சிவபாலன், பிரகாஷ் ராவ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.