
புத்ரா ஜெயா, நவ 16-
வரும் 2025 ஆம் ஆண்டிற்கு முன்னதாக இவ்வாண்டு அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்க உறுப்பினர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மிகப்பெரிய சாதனையாக உள்ளது என்று மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் தெரிவித்தார்.
இரு தினங்களுக்கு முன்னர் 2023 தேசிய தொழிற்சங்க பேரவையை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து பேசுகையில் “இந்த சாதனை பெருமைப்பட வேண்டிய ஒன்று என்று வர்ணித்தார்.
நாட்டின் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் தொழிற்சங்க உறுப்பினர் விகிதம் பாதியாக இருப்பதை உறுதி செய்ய எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று சிவக்குமார் கேட்டுக் கொண்டார்.
நாட்டில் 16 மில்லியன் தொழிலாளர்கள் உள்ளனர். மொத்தத்தில் (தொழிலாளர்கள்) பாதி என்ற விகிதத்தை எட்டினால், அது மிகவும் ஊக்கமளிக்கும் விகிதமாக இருக்கிறது என்று அவர் சொன்னார்.
இதற்கிடையில், இஸ்ரேலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிறுவனங்களுக்கு எதிரான புறக்கணிப்பைத் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்ட அல்லது பணி பாதிக்கப்பட்ட எந்தவொரு ஊழியரும் மனித வள அமைச்சில் (கேஎஸ்எம்) புகார் செய்யலாம் என்றார்.
“அமைச்சிடம் புகார் செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு. இந்த விஷயத்தை நாங்கள் கவனிப்போம், ”என்று அவர் கூறினார்,
இதுவரை, இது தொடர்பாக எந்த அறிக்கையும் பெறவில்லை என்று அவர் சொன்னார்.

