
அடுத்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கி நீர் மற்றும் மின்சார கட்டணங்கள் உயரலாம் என இயற்கை, சுற்றுச்சூழல் பருவ நிலை மாற்றத் துறை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமட் கொடி காட்டியுள்ளார்.
பராமரிப்புச் செலவுகள் அதிகரிப்பதை தொடர்ந்து கட்டணங்களை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
ஆனால், அடிதட்டு மக்களுக்கு இந்த கட்டண உயர்வு பாதிக்காது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
நாட்டிலுள்ள சில மாநிலங்களில் பல ஆண்டுகளாக நீர் கட்டணம் உயர்த்தப்படாமல் உள்ளன. குறிப்பாக பகாங் மாநிலத்தில் 40 ஆண்டுகளாகவும் பெர்லீஸில் 25 ஆண்டுகளாகவும் தண்ணீர் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
தற்போது, இவ்விரு சேவை துறைகள் சார்ந்த பராமரிப்புகளுக்கு அதிகப்படியான செலவுகள் ஏற்படுவதால் மட்டுமே கட்டண உயர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்பில் முதலில் அமைச்சரவையில் கலந்து பேசப்பட்ட பின்னரே அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஸ்பான் எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ் ஊடகத்தினருக்கான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் நிக் நஸ்மி இத்தகவலை பகிர்ந்து கொண்டார்.
இந்த விருந்துபசரிப்பில் ஸ்பான் தலைவர் சார்ல்ஸ் சந்தியாகோ உட்பட இதர அதிகாரிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

