
கோலாலம்பூர், நவ.27-
தேசம் ஊடக குழுமத்தின் ஏற்பாட்டில்
தேசம் ஊடக அனைத்துலக சாதனையாளர்கள் விருது விழா டிசம்பர் 2ஆம் தேதி 2023 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் சென்னை HOTEL LE ROYAL MERIDIEM BALLROOMவில் நடைபெறவுள்ளதாக தேசம் தோற்றுநர் குணாளன் மணியம் கூறினார்.
மலேசியன் இந்தியன் காங்கிரஸ் (ம.இ.கா)வின் ஆதரவில் அதன் தேசிய தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த தேசம் அனைத்துலக சாதனையாளர்கள் விருது விழாவில், தமிழக செய்தி துறை அமைச்சர் மாண்புமிகு எம்.ப.சாமிநாதன், சிறுதொழில் துறை அமைச்சர் தா.மோ. டி.அன்பரசன் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, ஐஏஎஸ் அதிகாரிகள், பிரமுகர்கள் சிறப்பு வருகையாளராக கலந்து கொள்வார்கள்.
இந்த நிகழ்விற்கு மேலும் டத்தோ தொ.முருகையா, டத்தோ கோகிலன் பிள்ளை, ம.இ.கா கல்விக்குழு தலைவர் டத்தோ நெல்சன், தேசிய ம.இ.கா பொருளாளர் தான்ஸ்ரீ ராமசாமி, ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர்கள், ம.இ.கா தலைவர்கள், கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஶ்ரீ டத்தோ டாக்டர் ஆர்.நடராஜா உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கலந்து கொள்ளவிருப்பதாக குணாளன் மணியம் தெரிவித்தார்.
தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் ஆசியில் நடைபெறவுள்ள இந்த தேசம் ஊடக அனைத்துலக சாதனையாளர் விருது விழாவில் கலந்து கொள்ள தமிழக இளைஞர், விளையாட்டு அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு திருவண்ணாமலையில் முதல் முறையாக தேசம் அனைத்துலக சாதனையாளர்கள் விருது விழா நடைபெற்றது. அதன்பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதாவது 6 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையான தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறவுள்ளது.
மலேசியாவில் 2017ஆம் ஆண்டு தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதாவது 2017, 2019, 2023 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தேசம் அனைத்துலக சாதனையாளர்கள் விருது விழாவில் மலேசியா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 100 சாதனையாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.
இந்த விருது விழாவிற்கு மலேசிய சாரா போம்பே நிறுவனம் முதன்மை ஆதரவாளராக இருக்கின்றனர்.
மலேசிய அரசாங்கம், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம், மலேசிய தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த விழாவில் கலந்து கொள்ள சுமார் 100 பேர் நவம்பர் 28 தொடங்கி கட்டம் கட்டமாக சென்னை புறப்படுகின்றனர்.
இதில் 15 ஊடகவியாளர்களும் தேசம் ஊடகத்தின் ஆதரவில் டிசம்பர் 1ஆம் நாள் சென்னை பயணிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புக்கு 016-7301587 (குணாளன் மணியம்).

