

சுபாங் ஜெயா டிச 6-
Gantian Pekerja எனப்படும் மாற்றுத் தொழிலாளி பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
முறையான பெர்மிட்டுடன் வேலை செய்யும் அந்நிய தொழிலாளர்கள் தவணைக் காலம் முடிவதற்குள் நாடு திரும்பினால் முதலாளிகளுக்கு அந்நிய தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும்.
குறிப்பாக பத்து அந்நிய தொழிலாளர்களில் ஐந்து தொழிலாளர்கள் சொந்த பிரச்சனைகளால் நாடு திரும்ப நேரிட்டால் முதலாளிகள் தொடர்ந்து வியாபாரத்தை நடத்த முடியாது.
நாடு திரும்பிய தொழிலாளிக்கு பதில் மாற்றுத் தொழிலாளியை வேலைக்கு அமர்த்தி கொள்ள மனிதவள அமைச்சு உதவி புரிய வேண்டும் என்று பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்திய உணவகங்கள் சங்கத்தின் தலைவர் சுரேஸ் கோவிந்தசாமி கோரிக்கையை முன் வைத்தார்.
பிரிமாஸ் முன் வைத்திருக்கும் கோரிக்கை நியாயமானது மற்றும் தொழிலாளி பற்றாக்குறை பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.
இது தொடர்பாக மனிதவள அமைச்சு மற்றும் உள்துறை அமைச்சு இடையிலான ஒருங்கிணைந்த நடவடிக்கை குழு கூட்டத்தில் பேசப்படும்.
அதன் மூலம் மாற்று தொழிலாளி பிரச்சனைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.
மலேசிய இந்திய உணவகங்கள் சங்கத்தின் 23 ஆம் ஆண்டு ஆண்டுக் கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

