
புத்ரா ஜெயா, டிச 11-
மலேசிய மனிதவள அமைச்சரும் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினருமான மான்புமிகு சிவக்குமார் அவர்கள் பேராக் மாநில மலேசிய திராவிடர் கழக சமுதாய சேவைக்கும் செயல்பாடுகளுக்கும் 30,000 வெள்ளி மானியம் வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.
இந்த மானியம் வழங்கும் நிகழ்வை ஒட்டி பேசிய கழகத்தின் செயலாளரும், கோலாகங்சார் நகராண்மை கழக உறுப்பினருமான திரு. கோபி இராசாமி,
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பேராக் மாநில ம. தி. க. மற்றும் சுங்கை சிப்புட் கிளை வாயிலாக இந்தியர் மற்றும் தமிழர் சார்ந்த கலை, கலாச்சாரம், பண்பாடு தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்வி, மாணவர் நலன் இன்னும் பல நல்சேவைகளுக்கு மான்புமிகு சிவக்குமார் அவர்கள் ஒரு வழிகாட்டியாகவும் பக்கபலமாகவும் இருந்து வந்துள்ளதாக கூறினார்.
இதுபோன்ற சமுதாயத்திற்கான நல்ல பயனுள்ள சேவைகளை பேராக் மாநில ம. தி. க. தொடர்ந்து வழங்கும் வகையில் அமைச்சர் சிவக்குமார் இந்த மானியத்தை வழங்கியதாகவும் சொன்னார்.
மாதிரி காசோலை வழங்கும் நிகழ்வில் பேராக் மாநில ம. தி. க. வின் செயலாளர் மானமிகு இரா கோபியுடன் அதன் தலைவர் மானமிகு இரா. கெங்கையா, பொருளாளர் மானமிகு த. இராஜசேகரன் மற்றும் தலைமை கழக ம. தி. க. – வை பிரதிநிதித்து தேசியத் துணைத்தலைவர் மானமிகு சா. இரா. பாரதி, தேசியப் பொதுச் செயலாளர் மானமிகு பொன். பொன்வாசகம் ஆகியோர் கலந்து கொண்டதோடு மான்புமிகு அமைச்சர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்தினையும் மனமார்ந்த நன்றியினையும் கூறிக்கொண்டதோடு, அடுத்தடுத்து கழக வழி நடைபெறும் விழாக்களுக்கும் நிகழ்வுகளுக்கும் அதிகாரப்பூர்வமாக வருகையும் ஆதரவும் வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.

